2015-10-20 15:43:00

திருத்தந்தை :சமுதாயத்தை அழிக்கும் புற்றுநோய் ஊழல்


அக்.20,2015. “சமுதாயத்தை அழிக்கும் புற்றுநோய் ஊழல்” என்பது, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டர் செய்தியாக, இச்செவ்வாயன்று பிரசுரிக்கப்பட்டுள்ளது. 

மேலும், திருப்பீடச் செய்தித் தொடர்பகத்தின் @HolySeePress டுவிட்டர் பக்கத்தில், இம்மாதம் 2ம் தேதிக்கும் 18ம் தேதிக்கும் இடைப்பட்ட நாள்களில், ஆங்கிலம், இஸ்பானியம், இத்தாலியம் ஆகிய மூன்று மொழிகளில் ஏறக்குறைய 1,600 டுவிட்டர் செய்திகள் பதிவு செய்யப்பட்டன என்று, இத்திங்கள் பத்திரிகையாளர் கூட்டத்தில் அறிவித்தார் திருப்பீடச் செய்தித் தொடர்பாளர் அருள்பணி பெதரிக்கோ லொம்பார்தி.

வத்திக்கானில் நடைபெற்று வரும் குடும்பம் குறித்த 14வது உலக ஆயர்கள் மாமன்றத்தில் கலந்துகொள்ளும் தந்தையர், வல்லுனர்கள், பொதுநிலையினர் மற்றும் பிற கிறிஸ்தவ சபைகளின் பிரதிநிதிகளின் அறிக்கைகள் மொழி பெயர்க்கப்பட்டு, திருப்பீடச் செய்தித் தொடர்பக டுவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டன என்றும் அறிவித்தார் அருள்பணி லொம்பார்தி.  

அக்டோபர் 2க்கும் 18ம் தேதிக்கும் இடைப்பட்ட நாள்களில் 19 இலட்சத்து 50 ஆயிரம் பேர் இப்பக்கத்தைப் பார்வையிட்டுள்ளதோடு, 1,184 பேர் புதிதாகவும் இதில் இணைந்துள்ளனர் என்றும், 6,329 பேர் டுவிட்டர்களில் பதில் அனுப்பியுள்ளனர், 3,610 பேர் விரும்பி வாசிப்பதாகவும் பதிவு செய்துள்ளனர் என்றும் கூறினார் அருள்பணி லொம்பார்தி.

இவர்களில் 29 விழுக்காட்டினர் அமெரிக்க ஐக்கிய நாட்டினர், 21 விழுக்காட்டினர் இத்தாலியர் மற்றும் 7 விழுக்காட்டினர் இஸ்பானியர்கள் என்றும் அறிவிக்கப்பட்டது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.