2015-10-20 16:12:00

கானா ஆயர்கள்: நியாயமான தேர்தல்களுக்கு அழைப்பு


அக்.20,2015. ஆப்ரிக்காவின் கானா நாட்டில் 2016ம் ஆண்டின் பொதுத் தேர்தல்கள் நியாயமான முறையில் நடைபெறுவதற்கு அதிகாரிகள் உழைக்குமாறு கேட்டுள்ளனர் அந்நாட்டு ஆயர்கள்.

கானா நாட்டில் 2016ம் ஆண்டில் பொதுத் தேர்தலுக்குத் தயாரிக்கப்படும் வாக்காளர் பட்டியலில், ஓட்டளிப்பதற்கு தகுதியானவர்களே சேர்க்கப்பட வேண்டுமென்று அதிகாரிகளைக் கேட்டுள்ள ஆயர்கள், வாக்காளர் பட்டியல் நம்பிக்கைக்குரியதாய் அமைந்திருக்குமாறு வலியுறுத்தியுள்ளனர்.

கானாவில் 2012ம் ஆண்டில் பதிவுசெய்யப்பட்ட வாக்காளர் பட்டியலில், அந்நாட்டின் ஏறக்குறைய இரண்டு கோடியே ஐம்பது இலட்சம் மக்களில், ஒரு கோடியே 40 இலட்சம் பேர் வாக்காளர்கள் என்று அறிவிக்கப்பட்டது. ஆயினும், கானா மக்கள்தொகையோடு ஒப்பிட்டுப் பார்க்குபோது, இவ்வெண்ணிக்கை மிக அதிகம் என்று விமர்சகர்கள் கூறுகின்றனர். இவ்வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள மக்களில் 76 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் அண்டை நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள ஆயர்கள், இப்புகார் உண்மையெனில், புதிய வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்படுமாறு கானா அரசை கேட்டுள்ளனர்.

ஆதாரம் : CNA / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.