2015-10-19 15:25:00

கடுகு சிறுத்தாலும் – எது உண்மையான நோன்பு?


அந்தத் துறவி கடுமையான நோன்பு இருப்பவர். ஆதவன் உதயமான பின்னர் அவர் எதையும் உண்பதில்லை. தண்ணீரைக்கூட பருகமாட்டார். அவரது நெறி தவறாத தன்மையைப் போற்றும் வகையில் வானில் ஒரு விண்மீன் தோன்றியது. அதுவும் பகல் நேரத்தில். அத்தகைய சிறப்பு வாய்ந்த துறவிக்கு ஒருநாள் அருகிலிருந்த மலையின் உச்சிக்குச் செல்ல வேண்டியிருந்தது. அவ்வூரில் இருந்த ஒரு சிறுமி அத்துறவியோடு தானும் வருவதாக அடம்பிடித்தாள். சரி வா என்று அழைத்துக்கொண்டு புறப்பட்டார் துறவி. இருவரின் பயணமும் இனிதே தொடங்கியது. சிறிது தூரம்தான் போயிருப்பார்கள். வெயில் அதிகம் என்பதால் தாகம் எடுத்தது. தண்ணீர் வேண்டும் என்றாள் சிறுமி. துறவியும் தண்ணீரைக் கொடுத்து குடிக்கச் சொன்னார். நீங்க குடிச்சாதான் நானும் குடிப்பேன் என்றாள் சிறுமி. குழந்தாய், நான், நோன்பில் இருக்கிறேன். ஆதவன் உதயமான பின்னர் நான் எதையும் சாப்பிடுவதில்லை என்றார் துறவி. ம்ஹூம். நீங்கள் அவசியம் தண்ணீர் குடித்தே ஆக வேண்டும் என்று பிடிவாதம் பிடித்தாள் சிறுமி. துறவிக்குத் தர்ம சங்கடமானது. ஒருபுறம் தனது நோன்பு, மறுபுறம் சிறுமியின் தாகம். எதைப் பார்ப்பது? இறுதியாக, தண்ணீரை எடுத்துக் குடித்தார் துறவி. சிறுமியும் பருகினாள். தலைகுனிந்தபடியே நடந்தார் துறவி. விண்ணைப் பார்ப்பதற்கு அவருக்குத் துணிச்சல் இல்லை. நோன்பை முறித்துவிட்டோம். எனவே வானில் அந்த விண்மீனும் மறைந்து போயிருக்கும் என்று நினைத்தார். அந்த மலையின் உச்சியை அடைந்த பின்னர் தற்செயலாக ஒருமுறை நிமிர்ந்து உயரே பார்த்தார் துறவி. வானில் இரு விண்மீன்கள் இவருக்காக மின்னிக்கொண்டிருந்தன. 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.