2015-10-16 16:49:00

வீடற்றவர் இல்லத்தைப் பார்வையிடுகிறார் திருத்தந்தை


அக்.16,2015. “அன்பு இளையோரே, உங்களை முழுவதும் கையளிப்பதற்கு அஞ்ச வேண்டாம். கிறிஸ்து ஒருபோதும் உங்களை ஏமாற்ற மாட்டார்” என்பது, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டர் செய்தியாக, இவ்வெள்ளியன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், உரோம் நகரில் வீடின்றி தெருவில் உறங்கும் மக்களுக்கென வத்திக்கான் அமைத்துள்ள இல்லத்தை, இவ்வியாழன் மாலை ஆயர்கள் மாமன்றம் நிறைவடைந்த பின்னர் பார்வையிட்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

வத்திக்கான் தூய பேதுரு வளாகத்திற்கு அருகிலுள்ள Penitenzieri சாலையில் இயேசு சபை தலைமையகம் வழங்கிய இல்லத்தில் 34 பேர் உறங்கக்கூடிய வகையில் படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. 84 வீடற்றவர்களுக்கு உறங்கும் வசதிகள் அமைத்துக் கொடுப்பதற்கு வத்திக்கான் திட்டமிட்டுள்ளது.

திருத்தந்தையின் தர்மச் செயல்களை எடுத்து நடத்தும் பேராயர் Konrad Krajewski, இந்தத் தர்மச் செயல்கள் துறையின் பேரருள்திரு Diego Ravelli, இயேசு சபை தலைவர் அருள்பணி Adolfo Nicolás, இயேசு சபை தலைமையகத் தலைவர் அருள்பணி Joachin Barrero, அன்னை தெரேசா சபையின் மூன்று சகோதரிகள், இங்கு தன்னார்வப் பணியாற்றும் சிலர், இன்னும் இவ்வில்லத்தில் உறங்கும் ஏறக்குறைய முப்பது பேர் திருத்தந்தை அவ்வில்லம் சென்றபோது இருந்தனர்.

வீடற்ற ஒவ்வொருவரையும் தனித்தனியே கைகுலுக்கி அவ்விடத்தையும் சுற்றிப் பார்த்தார் திருத்தந்தை.  

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.