2015-10-05 17:39:00

விவிலியத் தேடல் – பெரிய விருந்து உவமை – பகுதி 1


"'கிறிஸ்தவ வாழ்வின் அடையாள அட்டையைக் காட்டுங்கள்' என்று யாராவது கேட்டால், நாம் அவர்களுக்குக் காட்டக்கூடியது, ஓர் அழைப்பிதழே" என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புனித மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் வழங்கிய மறையுரையில், கிறிஸ்தவ வாழ்வின் மிக உன்னதமான ஓர் அம்சத்தை அழகாக விளக்கிக் கூறினார்.

"கிறிஸ்தவ வாழ்வு ஓர் அழைப்பு. அழைப்பிதழ் இன்றி இவ்வாழ்வில் அடியெடுத்துவைக்க இயலாது. 'நான் இவ்வாழ்வின் நுழைவாயிலுக்குச் சென்றதும், நுழைவுச் சீட்டை பணம் கொடுத்து வாங்குவேன்' என்று யாராலும் சொல்லமுடியாது. ஏனெனில், அழைப்பின்பேரில் மட்டுமே இங்கு நுழைய முடியும். விலைமதிப்பற்ற இவ்வழைப்பை நம்மால் விலைகொடுத்து வாங்க முடியாது. அந்த ஒப்பற்ற விலையை இறைமகன் இயேசு தன் இரத்தத்தால் ஏற்கனவே வழங்கிவிட்டார்" என்ற அழகியதோர் உருவகத்தை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் மறையுரையில் கூறினார். அன்றைய மறையுரையின் மையமாக அவர் எடுத்துக் கொண்டது, லூக்கா நற்செய்தி, 14ம் பிரிவில் நாம் காணும் ஓர் உவமை - பெரிய விருந்து உவமை. இந்த உவமையில் இன்று நம் விவிலியத் தேடல் துவங்குகிறது.

இந்தியாவில், அதிலும் குறிப்பாக, தமிழ்நாட்டில் விருந்தோம்பல் என்பது நம்மை அடையாளம் காட்டும் ஓர் அற்புதப் பண்பு. “Atithi Devo Bhava” அதாவது, விருந்தினரைக் கடவுளாகக் கருதவேண்டும் என்பது இந்தியக் கலாச்சாரத்தில் ஊறிய ஒரு பண்பு. இந்தப் பின்னணயில் நாம் இயேசு கூறிய பெருவிருந்து உவமையை அணுகுவோம். "ஒருவர் பெரிய விருந்து ஒன்றை ஏற்பாடு செய்து, பலரை அழைத்தார்" (லூக்கா 14: 16) என்ற வார்த்தைகளுடன் ஆரம்பமாகும் இவ்வுவமைக்குள் நாம் நுழைவதற்கு முன், ஒரு சில எண்ணங்களைத் தெளிவாக்குவது பயனளிக்கும். இஸ்ரயேல் மக்கள் மத்தியில் விருந்து என்ன பொருள் பெறுகிறது என்பதையும், விவிலியத்தில் நடைபெறும் விருந்துகளின் முக்கியத்துவத்தையும் அறிய முயல்வோம். இயேசு இவ்வுவமையைச் சொல்வதற்குத் தூண்டுதலாக அமைந்த நிகழ்வுகளையும் ஓரளவு ஆய்வு செய்ய முயல்வோம்.

எந்த ஒரு கலாச்சாரத்திலும் விருந்து என்பது வெறும் உணவு மட்டுமல்ல. ஒவ்வொரு விருந்துக்கும் பின்புலத்தில் பாசம், பந்தம், உறவு, நட்பு, குலப்பெருமை என்று எத்தனையோ அம்சங்களை நாம் கொண்டாடுகிறோம். அமெரிக்காவிலிருந்து இங்கு உரோம் வந்திருந்த ஒரு குருவைச் சந்தித்தேன். நான் தமிழ் நாட்டிலிருந்து வந்தவன் என்பதை அவரிடம் சொன்னபோது, அவர் முகத்தில் பளீரென ஒரு புன்னகை. அவர் தமிழ்நாட்டுக்குச் சென்றபோது, அவருக்கு ஏற்பட்ட அனுபவத்தை அசைப்போட்டார். சென்ற இடத்திலெல்லாம் மக்கள் அவரை வரவேற்ற விதம் அவரால் மறக்க முடியாத அனுபவம் என்றும் சொன்னார்.

வந்தாரை வாழவைக்கும் தமிழகம் - என்று நம் விருந்தோம்பல் பண்பைப் பற்றி அடிக்கடி தலையை நிமிர்த்தி, நெஞ்சுயர்த்தி பெருமைப்படுகிறோம். பொதுவாகவே, இந்தியாவுக்கு, சிறப்பாக, தமிழகத்திற்கு வருகை தரும் பலருக்கும் மனதில் ஆழமாய்ப் பதியும் ஓர் அனுபவம்... நாம் அவர்களை வரவேற்று உபசரிக்கும் பாங்கு. அதிலும், மேற்கத்தியக் கலாச்சாரத்தில் பிறந்து வளர்ந்தவர்களுக்கு இது முற்றிலும் புதிதான ஏன்?... புதிரான அனுபவமாக இருக்கும். விருந்தோம்பலில், அக்கரைக்கும், இக்கரைக்கும் அப்படி ஒரு வேறுபாடு.

இஸ்ரயேல் மக்கள் மத்தியில் விருந்துக்கு தனி முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. அடிமைகளாய், அன்னியநாட்டில், கொடுக்கப்பட்ட குறைவான உணவுக்கு மிருகங்களைப் போல போட்டிபோட்டு உண்ணவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தனர் இஸ்ரயேல் மக்கள். அவர்களைப் பொருத்தவரை, பந்தி அமர்ந்து விருந்துண்பதென்பது வெறும் உணவு மட்டுமல்ல, தலை சிறந்த ஒரு கனவு. பாதுகாப்பை, குடும்ப உணர்வை, நல்ல விளைச்சலை, செல்வக் கொழிப்பைக் குறிக்கும் ஓரு கனவு.

இஸ்ரயேல் மக்களின் இத்தகைய கனவுகளைப் பதிவுசெய்துள்ள விவிலியத்தில், நாம் பல இடங்களில் விருந்தைப் பற்றிய குறிப்புக்களைக் காண்கிறோம். விருந்துபற்றிய முதல் நிகழ்வு, தொடக்கநூல் 18ம் பிரிவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆபிரகாம் மூன்று மனிதர்களுக்கு அளித்த விருந்தைப்பற்றி அங்கு வாசிக்கிறோம். பகலில், வெப்பம் மிகுந்த நேரத்தில் ஆபிரகாம் தம் கூடார வாயிலில் அமர்ந்திருக்கையில் (தொ.நூ. 18: 1) என்று இப்பிரிவின் முதல் வரிகள் சொல்கின்றன.

வெப்பம் மிகுதியாகும்போது, மனமும், உடலும் சோர்ந்துவிடும். ஒருவேளை, ஆபிரகாம், அப்படி ஒரு சோர்வுடன் தன் கூடார வாயிலில் அமர்ந்திருந்தார். அந்நேரத்தில் மூன்று பேர் அவர்முன் நின்றனர். முன்பின் அறிமுகம் இல்லாத மூவர்... வழி தவறி வந்திருக்கலாம், வழி கேட்க வந்திருக்கலாம். இப்படி நேரம் காலம் தெரியாமல் வருபவர்களிடம் முகம் கொடுத்துப் பேசுவதே அபூர்வம். “யார் நீங்க? உங்களுக்கு என்ன வேணும்?” என்று சீக்கிரம் அவர்களை அனுப்பி வைப்பதுதான் வழக்கம். அதற்குப் பதில், ஆபிரகாம் செய்தது வியப்பான செயல். அங்கு நடந்ததைத் தொடக்க நூலிலிருந்து கேட்போம்:

தொடக்க நூல் 18 : 1-5

பகலில் வெப்பம் மிகுந்த நேரத்தில் ஆபிரகாம் தம் கூடார வாயிலில் அமர்ந்திருக்கையில், கண்களை உயர்த்திப் பார்த்தார்: மூன்று மனிதர் தம் அருகில் நிற்கக் கண்டார். அவர்களைக் கண்டவுடன் அவர்களைச் சந்திக்கக் கூடார வாயிலைவிட்டு ஓடினார். அவர்கள்முன் தரைமட்டும் தாழ்ந்து வணங்கி, அவர்களை நோக்கி, “என் தலைவரே... நீர் உம் அடியானை விட்டுக் கடந்து போகாதிருப்பீராக! இதோ விரைவில் கொஞ்சம் தண்ணீர் கொண்டுவரட்டும். உங்கள் கால்களைக் கழுவியபின், இம் மரத்தடியில் இளைப்பாறுங்கள். கொஞ்சம் உணவு கொண்டுவருகிறேன். நீங்கள் புத்துணர்வு பெற்றபின், பயணத்தைத் தொடருங்கள்...” என்றார்.

முன்பின் அறிமுகம் இல்லாதவர்களை, வழியோடு சென்றவர்களை, வலியச்சென்று அழைத்து வந்து விருந்து படைக்கிறார் ஆபிரகாம். அதுவும், வீட்டில் எதுவும் தயாராக இல்லாமல் இருக்கும்போது இப்படிப்பட்ட ஒரு விருந்து. விருந்தினர்கள் வீட்டுக்கு வந்த பிறகுதான் ஏற்பாடுகளே நடக்கின்றன. ஓர் எளிய, நடுத்தர குடும்பத்தில் நடக்கும் ஒரு காட்சி நம் மனக்கண் முன் விரிகிறது.

தனக்கோ, தன் குடும்பத்திற்கோ நல்ல உணவு இல்லாதபோதும், விருந்தினர் என்று வரும்போது, பிரமாதமாக விருந்து கொடுப்பவர்களை நாம் சந்தித்திருக்கிறோம். தாங்கள் வசதி படைத்தவர்கள் என்பதைப் பறைசாற்றச் செய்யப்படும் முயற்சி அல்ல இது. தங்கள் அன்பை, பாசத்தை அடிக்கோடிட்டுக் காட்டுவதே இந்த முயற்சி. நம் வீடுகளில் அடிக்கடி இப்படி நடந்திருக்க வாய்ப்புண்டு. முன்னறிவிப்பு ஏதுமின்றி வந்துவிடும் விருந்தினருக்கு, தன் வீட்டில் ஒன்றுமில்லாத நிலையிலும், தன் மகனை அடுத்த வீட்டுக்கு அனுப்பி, அல்லது வீட்டுக்கு எதிரே உள்ள கடையில் கடனைச் சொல்லி ஒரு பழரசமோ, காப்பியோ வாங்கிவந்து கொடுக்கும் எத்தனை பேரை நாம் பார்த்திருக்கிறோம்? அல்லது, எத்தனை முறை இப்படி நாம் நடந்து கொண்டிருக்கிறோம்?

அன்பைப் பறைசாற்றும் இத்தகைய விருந்துகளைப்பற்றிப் பேசும்போது, செல்வத்தைப் பறைசாற்றுவதற்கென்று விருந்து படைக்கும் செல்வந்தர்களைப் பற்றி இங்கு சிந்திக்காமல் இருக்கமுடியவில்லை. உலகிலேயே மிக அதிகச் செலவுடன் நடத்தப்பட்ட திருமணங்கள் என்ற பட்டியலை இணையதளத்தில் தேடிப்பார்த்தால், வேதனையான ஓர் ஆச்சரியம், நம் மனதில் வேலைப் பாய்ச்சும்.

2004ம் ஆண்டு உலகின் மிகப்பெரும்... மிக, மிக, மிகப் பெரும் செல்வந்தர்களில் ஒருவர் தன் மகளுக்கு நடத்திய திருமண விருந்து கின்னஸ் உலகச்சாதனை என்று பேசக்கூடிய அளவுக்கு செலவு செய்யப்பட்ட ஒரு விருந்து. அந்த விருந்துக்கு ஆன செலவு 60 முதல் 70 மில்லியன் டாலர், அதாவது ஏறத்தாழ 270 முதல் 300 கோடி ரூபாய். 1000 பெரும் புள்ளிகள் மட்டுமே கலந்துகொண்ட அவ்விருந்துக்கு ஆனச் செலவில் 30 கோடி ஏழை இந்தியர்கள் ஒரு நாள் முழுவதும் வயிறார சாப்பிட்டிருக்கலாம். அந்த விருந்தில் வீணாக்கப்பட்ட உணவை மட்டும் கொண்டு, குறைந்தது 10 கோடி ஏழைகள் வயிற்றைக் கழுவியிருக்கலாம். ஏன் இந்த விருந்தையும் இந்தியாவையும் முடிச்சு போடவேண்டும் என்று குழப்பமா? இந்த விருந்தைக் கொடுத்த செல்வந்தர் ஓர் இந்தியர். அதனால்தான்.

பொறாமையில் பொருமுகிறேன். உண்மைதான். ஆனால், இப்படிப்பட்ட விருந்துகள் இந்தியர்களால் நடத்தப்படுவது வேதனை என்பதையாவதுச் சொல்லித்தானே ஆகவேண்டும்.

விருந்தோம்பல் என்ற வார்த்தையைக் கேட்டதும், கட்டாயம் திருவள்ளுவரும், திருக்குறளும் நினைவுக்கு வந்திருக்கும். பத்துக் குறள்களில், விருந்தோம்பலின் மிக உயர்ந்த பண்புகளைத் தெளிவாகக் கூறுகிறார் திருவள்ளுவர். தொடக்க நூலில் ஆபிரகாம் அளித்த விருந்துக்கு விளக்கம் தருவதுபோல், இந்தப் பத்துக் குறள்களில் ஒன்று அமைந்துள்ளது:

செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான் நல்விருந்து வானத்தவர்க்கு

அதாவது, நாள் முழுவதும் விருந்தினரை உபசரித்து வழியனுப்பி, அடுத்த விருந்தினரை எதிர்கொண்டு வாழ்பவர், விண்ணவர் மத்தியில் விருந்தினர் ஆவார் என்று வள்ளுவர் சொன்னார்.

வானவரின் மத்தியில் விருந்தினர் ஆவது போல், வானவர் என்று தெரியாமலேயே, அவர்களை அழைத்து, விருந்து படைத்த ஆபிரகாமைக் குறித்து விவிலியத்தின் மற்றொரு பகுதியில் காணப்படும் வரிகள் இவை.

எபிரேயருக்கு எழுதிய திருமுகம் 13: 1-2

சகோதர அன்பில் நிலைத்திருங்கள். அன்னியரை வரவேற்று விருந்தோம்ப மறவாதீர்கள். இவ்வாறு விருந்தோம்பியதால் சிலர் தாங்கள் அறியாமலே வான தூதர்களை மகிழ்ச்சிப்படுத்தியதுண்டு.

விருந்து, விருந்தோம்பல் என்ற அழகிய வாழ்வியல் அம்சங்களை நமக்கு மீண்டும் ஒருமுறை நினைவுபடுத்தவும், தேவையானால், மீண்டும் ஒருமுறை நமக்குப் பாடங்கள் சொல்லித்தரவும் இறைமகன் இயேசு கூறிய 'பெருவிருந்து உவமை' நமக்கு உதவும் என்ற நம்பிக்கையுடன், நம் தேடலைத் தொடர்வோம்....

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.