2015-10-01 16:23:00

இறைவனில் மகிழ்வதே, நமக்கு சக்தி – திருத்தந்தை மறையுரை


அக்.01,2015. இறைவனைப் பற்றிய எண்ணங்களைச் சுவைத்து, அசைபோடுவதிலிருந்து நாம் விலகிச் சென்றால், நம்மால் எதையும் கொண்டாடமுடியாது என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வியாழன் காலை திருப்பலியில் மறையுரையாற்றினார்.

திருத்தந்தையின் மனதுக்கு மிகவும் நெருங்கிய புனிதர்களில் ஒருவரான, லிசியு நகர், புனித தெரேசாவின் திருநாளான இவ்வியாழனன்று, சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் நிறைவேற்றிய திருப்பலியில், இறைவாக்கினர், நெகேமியாவின் வார்த்தைகளை மையப்படுத்தி, திருத்தந்தை மறையுரை வழங்கினார்.

தன் இல்லம் உட்பட, தனக்குச் சொந்தமானவற்றை இழந்துவிடுவோர், தங்கள் இல்லத்தைப் பற்றிய நினைவுகளை அசைபோடுவதன் வழியாக, தங்கள் சுய அடையாளத்தையும், மகிழ்வையும் மீண்டும் பெறுகின்றனர் என்று, திருத்தந்தை தன் மறையுரையில் குறிப்பிட்டார்.

நினைவுகளை அசைபோடத் தெரியாதவர், மகிழ்வு என்றால் என்ன என்பதை அறிவதில்லை என்று கூறியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இறைவனில் மகிழ்வதே, நமக்கு சக்தி என்று எடுத்துரைத்தார்.

மேலும், "நமது வாழ்வு, இலக்கற்று சுற்றித்திரிவது அல்ல; நம் தந்தையின் இல்லமே, நம்முடைய இலக்கு" என்ற வார்த்தைகளை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் டுவிட்டர் செய்தியாக, இவ்வியாழனன்று வெளியிட்டார்..

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.