2015-09-23 16:01:00

கடுகு சிறுத்தாலும்: புறச்செயலை வைத்து அகத்தை எடைபோட வேண்டாம்


துறவி கெஸ்ஸென்(Gessen) ஒரு சிறந்த ஓவியர். தனது வேலைக்கு, கொஞ்சம்  அதிகமாகவே கட்டணம் வசூலிப்பவர். அவர் ஓவியம் வரைவதற்கு முன்னரே அதற்குரிய கட்டணத்தைக் கொடுத்துவிட வேண்டும். ஒரு சமயம் ஒரு பெண் அவரிடம், நீங்கள் கேட்கும் பணத்தை நான் தருகிறேன், ஆனால் அந்த ஓவியத்தை என் முன்னால்தான் வரைய வேண்டும் என்ற நிபந்தனையை முன்வைத்தார். அவரும் அதற்கு ஒத்துக் கொண்டார். பின்னர் ஒருநாள் அப்பெண், அத்துறவியையும், தனது நண்பர்களையும் அழைத்து பெரிய விருந்து கொடுத்து, துறவியிடம் ஓவிய வேலையைத் தொடங்கச் சொன்னார். துறவியும் அப்பெண்ணின் கண்ணெதிரே அழகான ஓவியத்தை வரைந்து கொடுத்தார். அதற்கு அவர் இதுவரை வாங்காத அதிகத் தொகையையும் கேட்டுப் பெற்றுக் கொண்டார். பின்னர் அப்பெண் விருந்தினர்களை அழைத்து, இந்தக் கலைஞனுக்குப் பணம்தான் முக்கியம். இவருடைய ஓவியம் சிறப்பானதுதான். ஆனால் இவருடைய மனம் மிகவும் அருவெறுப்பானது. இப்படியொரு கீழ்த்தரமான மனம் வரைந்த ஓவியம் காட்சிக்கு வைக்கப்பட தகுதி படைத்தது அல்ல, அது நான் உடுத்தும் மேலாடைக்குச் சமம் என்று வெறுப்பாகச் சொன்னாள். பின்னர், அப்பெண் தனது மேலாடையைக் கழற்றி வேறோர் ஓவியம் வரையும்படிச் சொன்னாள். அவரும் வரைந்து மிக அதிகமாகவே பணத்தைப் பெற்றுக்கொண்டார். ஆனால் துறவி கெஸ்ஸென் தனது வேலைகளுக்கு இவ்வளவு பணம் பெற்றதற்கு மூன்று காரணங்கள் உண்டு. ஒன்று. அவர் வாழ்ந்த ஊரில் கடும் பஞ்சம். செல்வந்தர் ஏழைகளுக்கு உதவவில்லை. அதனால் இவர் அப்பணத்தைக் கொண்டு ஏழைகளுக்கு உதவினார். அடுத்து அவர் வாழ்ந்த கிராமத்திலிருந்து புத்த மடாலயத்திற்குச் செல்வதற்குப் பாதை கரடுமுரடாக இருந்தது. அதனால் அப்பாதையைச் செம்மைப்படுத்துவதற்கு அவருக்குப் பணம் தேவைப்பட்டது. மூன்றாவதாக, அத்துறவியின் ஆசிரியர் கோவில் கட்ட விரும்பினார். அதைக் கட்ட இயலாமல் அவர் இறந்து விட்டதால் ஆசிரியரின் ஆவலை நிறைவேற்ற துறவிக்குப் பணம் தேவைப்பட்டது. எனவே ஒருவரது வெளிச்செயலை வைத்து அவரது உள்ளத்தை எளிதாக எடை போடுதல் நல்லதல்ல. 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.