2015-09-22 15:54:00

கடுகு சிறுத்தாலும் : உழைக்க மனமில்லாதவர் உண்ணலாகாது


ஹையாகுஜோ என்ற சீன நாட்டு ஜென் குரு, அந்த ஆசிரமத்தில் தோட்ட வேலை முதல் எல்லா விதமான வீட்டு வேலைகளை தனது மாணவர்களோடு சேர்ந்தே செய்து வந்தார். இது அவரின் மாணவர்களுக்குப் பிடிக்கவில்லை. தாங்கள் சொன்னால் தங்களின் குரு கேட்கமாட்டார் என்று எண்ணிய மாணவர்கள், ஒருநாள் அவர் வேலை செய்யப் பயன்படுத்தும் கத்தி, கடப்பாறை, அரிவாள், மண்வெட்டி என எல்லாவற்றையும் மறைத்து வைத்தனர். அன்றைக்கு குரு ஹையாகுஜோ அவர்கள் எதுவும் சாப்பிடவில்லை. அதேபோல் அவர் அடுத்த நாளும் சாப்பிடவில்லை. இதைக் கண்ட மாணவர்கள், அவர் வேலை செய்யும் கருவிகளை மறைத்து வைத்ததால்தான் நம்மேல் கோபமாக இருக்கிறார் என்று நினைத்து அவரிடம் மன்னிப்புக் கேட்டனர். பின்னர் அவர் மீண்டும் வேலையில் ஈடுபட மாணவர்கள் கருவிகளைக் கொடுத்து உதவினர். என்றைக்கு அவர் தன் வேலையைத் தொடங்கினாரோ அன்றிலிருந்து அவர் எப்பொழுதும்போல சாப்பிட ஆரம்பித்தார். ஒருநாள் மாலை ஹையாகுஜோ அவர்கள், வேலை இல்லையேல் உணவு இல்லை, அது யாராக இருந்தாலும் சரி என்று மாணவர்களுக்குப் போதித்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.