2015-09-19 16:17:00

மசூதி மீதான தாக்குதலுக்கு பாகிஸ்தான் திருஅவை கண்டனம்


செப்.,19,2015. செப்டம்பர் 18, வெள்ளிக்கிழமையன்று, பாகிஸ்தான் பெஷாவர் நகரின் இஸ்லாமிய மசூதி ஒன்றின் மீது தாக்குதல் நடத்தி 19 பேரின் உயிரிழப்புகளுக்கு காரணமாகியுள்ள தலிபான் தீவிரவாதிகளின் செயல் குறித்து தன் வன்மையான கண்டனத்தை வெளியிட்டுள்ளது அப்பகுதி தலத் திருஅவை.

இத்தகையத் தாக்குதல்களை வன்மையாக கண்டிப்பதாகவும், நாட்டில் அமைதி கொணரப்பட தொடர்ந்து செபிப்பதாகவும் அறிவித்தார், இஸ்லாமாபாத்-இராவல்பிண்டி ஆயர் ரூஃபின் ஆந்தனி அவர்கள்.

வான்படை தளத்திற்குள் நுழைந்த தீவிரவாதிகள், அங்குள்ள மசூதியில் செபித்துக் கொண்டிருந்தோர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதில், 16 பேர் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர். அவர்களை எதிர்த்துப் போராடிய இராணுவ அதிகாரி ஒருவரும், இரு இராணுவ தொழில் நுட்ப வல்லுனர்களும் உயிரிழந்தனர். இரு தரப்பினருக்கும் இடையே இடம்பெற்ற மோதலில் 13 தீவிரவாதிகளும் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஆதாரம் :  UCAN/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.