2015-09-18 16:03:00

தாய்வீட்டைத் தேடிவரும் குழந்தையாக வருகிறேன் - திருத்தந்தை


செப்.18,2015. குழந்தையொன்று தன் தாய்வீட்டைத் தேடி வருவதுபோல், கியூபா நாட்டில் உள்ள கோப்ரே (Cobre) அன்னை மரியாவின் திருத்தலத்திற்கு நான் வர விழைகிறேன் என்ற சொற்களுடன், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கியூபா நாட்டு தொலைக் காட்சிக்கு ஒரு காணொளிச் செய்தியை அனுப்பினார்.

செப்டம்பர் 19, இச்சனிக்கிழமையன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கியூபா நாட்டிற்கும், அமெரிக்க ஐக்கிய நாட்டிற்கும் மேற்கொள்ளும் பத்தாவது திருத்தூதுப் பயணத்திற்கு முன்னதாக, அவர் வழங்கிய ஒரு காணொளிச் செய்தி, கியூபா நாட்டில், இவ்வியாழன் இரவு தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டது.

என் பயணத்திற்கு இன்னும் சில நாட்களே இருக்கும் இத்தருணத்தில், கிறிஸ்துவைப் பின்பற்றுவதற்கு தேவையான வலிமையை நாம் ஒவ்வொருவரும் பெறுவதற்கு, நமது நம்பிக்கையைப் பகிர்ந்துகொள்வதற்கு, இந்தப் பயணம் உதவியாக இருக்க வேண்டும் என்ற செய்தியுடன் திருத்தந்தையின் காணொளிச் செய்தி ஆரம்பமானது.

இந்தப் பயணத்திற்கு கியூபா மக்கள் அனைவரும் செபங்களின் வழியாக தாயரித்து வருவதைக் குறித்து, தான் மிகவும் மகிழ்வதாகக் கூறியத் திருத்தந்தை, கியூபா ஆயர்களின் ஆலோசனைகளை ஏற்று, எளிமையான சிறு செபங்கள் வழியே அந்நாட்டு மக்கள் செபித்துவருவது தன்னை மிகவும் கவர்ந்துள்ளது என்று, தன் செய்தியில் சிறப்பாகக் குறிப்பிட்டுள்ளார்.

இறைவனின் மென்மையான உள்ளத்தை வெளிப்படுத்தும் வகையில், தான் ஒரு மறைபரப்புப் பணியாளராக கியூபா நாட்டிற்கு வருவதாக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் காணொளிச் செய்தியில் வலியுறுத்திக் கூறியுள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி 








All the contents on this site are copyrighted ©.