2015-09-15 16:00:00

திருத்தந்தை : திருஅவை, தாய்மைப் பண்பைக் கொண்டிருக்க வேண்டும்


செப்.15,2015. அன்னை மரியாவைப் போல், திருஅவையும் தாழ்ச்சி, இரக்கம், மன்னிப்பு மற்றும் கனிவு ஆகியப் பண்புகளின் அடிப்படையில் வெளிப்படும் தாய்மைப் பண்பைக் கொண்டிருக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இச்செவ்வாயன்று கொண்டாடப்பட்ட துயருறும் அன்னை மரியா திருநாளை முன்னிட்டு, தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லத்தின் சிற்றாலயத்தில் திருப்பலி நிறைவேற்றி மறையுரையாற்றியத் திருத்தந்தை, இயேசு, சிலுவையில் தொங்கியபோது, அன்னை மரியாவை நம் அனைவரின் தாயாக ஒப்படைத்த நிகழ்வை மையமாக வைத்து, கருத்துக்களை வழங்கினார்.

ஒருவித ஆதரவற்ற நிலையை உணரும் இன்றைய உலகில், அன்னை மரியா, தாய்க்குரிய பாசத்துடன் நம்மை வழிநடத்துகிறார் என்று கூறியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அன்னை மரியாவின் தாய்மைப் பண்பே, திருஅவையின் தாய்மைப் பண்பாக விளங்கவேண்டும் என்றும் எடுத்துரைத்தார்.

தாய்மை இருக்குமிடத்தில், அமைதியில் வளர்வதற்குரிய சூழல் இருக்கும் என்று தன் மறையுரையில் சுட்டிக்காட்டியத் திருத்தந்தை, ஒரு குழந்தையை நோக்கி புன்னகைத்து, அக்குழந்தையையும் புன்னகைக்கச் செய்வது, மிக உன்னதமான செயல் என்று கூறினார். 

ஆதாரம் : / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.