2015-09-14 17:03:00

கடுகு சிறுத்தாலும் – கோபமூட்டுவதைவிட அமைதிப்படுத்துவது


ஒரு காட்டில் ஒரு சிங்கமும் ஒரு கழுதைப்புலியும் பசுவைப் பிடித்து வைத்திருந்தன. ஒரு நாள் சிங்கம் பசுவைக் கொன்றது. கழுதைப்புலி தன் குட்டியை சிங்கத்திடம் அனுப்பி தன் பங்கைக் கேட்டது. கழுதைப்புலியின் பங்காக பசுவின் குடலை மட்டும் கொடுத்து அனுப்பியது சிங்கம். கழுதைப் புலியோ, "நீ ஏன் குடலைக் கொண்டு வந்தாய்? அரைவாசிப் பங்குதானே நமக்கு உரியது?" என்று கேட்டது. அதற்குக் குட்டி கழுதைப்புலி,  "நான் சிறியவன். பெரியவர்கள் கொடுப்பதைத்தான் கொண்டு வர முடியும். நான் எப்படி சிங்கத்தோடு விவாதிக்க முடியும்" என்று சொல்லியது. அதைக்கேட்டு கோபமான கழுதைப்புலி அந்தக் குடலோடு சிங்கத்தைப் பார்க்கப் போனது. சிங்கம் உணவை உண்டு குகைக்குள் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தது. கழுதைப்புலி வந்ததைக் கண்டு கண்களை அச்சமூட்டும் வகையில் வைத்திருந்தது சிங்கம். "ஏன் இங்கே வந்தாய்?" - கர்ஜித்தபடி சிங்கம் கேட்டது.  பசுவில் பாதி கேட்க வந்த கழுதைப்புலி தற்போது தன் எண்ணத்தை மாற்றிக்கொண்டு, "அரச சிங்கமே! நீங்கள் குடல் அனுப்பியதற்கு மிக்க நன்றி, ஆனால் அதனை உங்களிடமே சேர்க்க முடிவு செய்து விட்டோம்" என்றது. குடலை சிங்கத்திடம் கொடுத்துவிட்டு திரும்பிய கழுதைப்புலியிடம் குட்டி கேட்டது: "பசுவில் பாதி கேட்கப்போன நீங்கள் குடலையும் கொடுத்து விட்டு வருகிறீர்களே?" என்று. "மகனே! சிங்கம் மிகக் கொடூரமாக இருந்தது. அதைக் கண்டு நான் நடுங்கி விட்டேன். எனவே எனது பங்கையும் கொடுத்துவிட்டுப் பாராட்டி விட்டு வந்தேன். எல்லாம் நன்மைக்காக" என்றது தாய் கழுதைப்புலி. ஆம். நம்மை விட வலியவர்களைக் கோபப்படுத்துவதைவிட அவர்களைச் சாந்தப்படுத்துவதே பாதுகாப்பானது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.