2015-09-12 15:27:00

கடுகு சிறுத்தாலும் – இயேசுவைச் சந்தித்தால் வாழ்வு மாறும்


குடிப் பழக்கத்தில் இருந்து முற்றிலும் திருந்திய ஒருவரை, பங்குத் தந்தை சந்திக்கிறார். அவரது மனமாற்றத்திற்கு, பங்குத் தந்தை காரணம் கேட்கும்போது, தான் இயேசுவைச் சந்தித்தாக சொல்கிறார், மனமாற்றம் பெற்றவர்.

அவர் உண்மையிலேயே இயேசுவைத்தான் சந்தித்தாரா என்று அறிய விழைந்த பங்குத் தந்தை அவரிடம் சில கேள்விகளை எழுப்புகிறார். இயேசு எங்கே பிறந்தார்? எத்தனை வருடம் வாழ்ந்தார்? எத்தனை புதுமைகள் செய்தார்? எங்கே இறந்தார்? என்று பங்குத் தந்தை அடுக்கிக்கொண்டே சென்ற கேள்விகள் எதற்கும், மனம் மாறீயவரால் பதில் சொல்ல முடியவில்லை. பங்குத் தந்தைக்கு ஒரே கோபம்... இந்தச் சாதாரணக் கேள்விகளுக்குக் கூட பதில் தெரியாதவர், எப்படி இயேசுவைச் சந்தித்திருக்க முடியும் என்று சந்தேகப்படுகிறார்.

அதற்கு, மனம் மாறிய அவர் சொல்லுவார்: "சாமி, நீங்கள் கேட்கும் இந்தக் கேள்விகளுக்கெல்லாம் எனக்குப் பதில் தெரியாது. ஆனால், ஒன்று மட்டும் எனக்குத் தெரியும். ஆறு மாதங்களுக்கு முன்பு வரை என் வாழ்வு நரகமாக இருந்தது. நான் தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து, என் மனைவி, குழந்தைகளைக் கொடுமைப் படுத்தினேன். மாலையில் நான் வீடு திரும்பும் நேரத்தில் என் கண்களில் படக்கூடாது என்று, என் குழந்தைகள் தெரு முனையில் சென்று ஒளிந்து கொள்வார்கள். ஆறு மாதங்களுக்கு முன் நான் பங்கேற்ற ஒரு செப வழிபாட்டின்போது இயேசுவைச் சந்தித்தேன். அன்றிலிருந்து என் வாழ்வு மாறியது. நான் குடிப்பதை நிறுத்தி விட்டேன். இப்போது நான் மாலையில் வீடு திரும்பும்போது, என் குழந்தைகள், தெரு முனையில் எனக்காகக் காத்துக் கொண்டு இருக்கிறார்கள். இந்த மாற்றத்தைத் தந்தது இயேசு. அது மட்டும்தான் எனக்குத் தெரியும்" என்று அவர் சொன்னதும், பங்குத் தந்தை மௌனமானார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.