பாலை மணல் வெளியில் நடந்து போய்க் கொண்டிருந்தார்கள் இரு நண்பர்கள். ஒரு கட்டத்தில் இருவருக்கும் ஒரு விடயம் குறித்து வாக்குவாதம் ஆரம்பித்தது. அது வாய்ச்சண்டையாக மாறியபோது, நண்பனின் கன்னத்தில் அறைந்துவிட்டான் மற்றொருவன். அறை வாங்கியவன், கோபிக்கவில்லை. அமைதியாக ஒதுங்கிப்போய் மணலில் அமர்ந்து, “இன்று என் உயிர் நண்பன் என் கன்னத்தில் அறைந்துவிட்டான்!” என மணலில் தன் விரல்கொண்டு எழுதினான். மற்றவனுக்கு ஒன்றும் புரியவில்லை. இருவரும் நடையைத் தொடர்ந்தார்கள். வழியில் ஒரு பாலைவன ஊற்றைக் கண்டார்கள்.
நடந்ததை மறந்து, அந்த ஊற்றில் வெப்பம் தீர குளிக்க ஆரம்பித்தார்கள். கன்னத்தில் அறை வாங்கியவன் காலை, திடீரென்று யாரோ இழுப்பது போன்ற உணர்வு. புதைக்குழியில் சிக்கிக் கொண்டதை உணர்ந்து அவன் கத்தினான். நண்பனின் நிலை கண்டதும், பெரும் சிரமப்பட்டு அவனைக் காப்பாற்றி கரையேற்றினான், அவனை அறைந்தவன். உயிர் பிழைத்த நண்பன், ஊற்றை விட்டு வெளியில் வந்ததும், அருகில் இருந்த ஒரு பாறையின் மீதமர்ந்து, மற்றொரு கல் கொண்டு பாறையில் எழுத்துக்களைப் பொறிக்க ஆரம்பித்தான் - “இன்று என் உயிர் நண்பன் என் உயிரைக் காப்பாற்றினான்”
இதையெல்லாம் பார்த்த மற்றவன், “நான் உன்னை அறைந்தபோது, மணலில் எழுதினாய். இப்போது காப்பாற்றியிருக்கிறேன். கல்லில் எழுதுகிறாய். இதற்கு என்ன அர்த்தம் நண்பா?” என்று கேட்டான். அறை வாங்கிய நண்பன், “யாராவது நம்மை காயப்படுத்தினால், அதை மணலில் எழுதிவிடு. மன்னிப்பு எனும் காற்று, அதை அழித்துவிட்டுப் போய்விடும். ஆனால் யாராவது நல்லது செய்தால், அதை கல்லில் எழுது. காலத்தைத் தாண்டி அது நிலைத்திருக்க வேண்டும்!” என்று சொன்னான்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©. |