2015-09-05 15:46:00

நற்செய்தி அறிவிப்பு இயக்கத்தினருக்கு திருத்தந்தை வாழ்த்து


செப்.05,2015. நற்செய்தி அறிவிப்புப் பணியைச் செய்யும்போது தூய ஆவியாரின் குரலுக்குச் செவிமடுப்பது மிகவும் முக்கியம் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இச்சனிக்கிழமையன்று கூறினார்.

பங்குத்தள நற்செய்தி அறிவிப்பு இயக்கத்தின் ஏறக்குறைய ஐந்தாயிரம் உறுப்பினர்களை முத்திப்பேறு பெற்ற திருத்தந்தை ஆறாம் பவுல் அரங்கத்தில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மறைபரப்புப் பணியாளராய் இருப்பதன் முக்கியத்துவம் பற்றிப் பேசினார்.

இந்த இயக்கத்தினரின் அன்றாடப் பணி, பங்குத்தளத்தை எவ்வாறு ஒரு குடும்பமாக உருவாக்குகின்றது என்றும், இதில், ஒருவர் ஒருவரைத் தீர்ப்பிடாத திருஅவையின் வளமைமிக்க பன்மைத்தன்மையைக் காண முடிகின்றது என்றும் கூறினார் திருத்தந்தை.

வீடுகளில் செய்வதைப் போன்று, இப்பணியிலும் நேரத்தை ஒன்று சேர்ந்து பகிர்ந்து கொள்வது, தொடக்ககாலத் திருஅவையில் இருந்தது போன்று தற்போதும், நற்செய்தி அறிவிப்புப் பணியில் நல்ல அனுபவமாக உள்ளது என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

நற்செய்தி அறிவிப்பு உணர்வைத் தூண்டும் நோக்கத்தில், தென் கொரியாவில் பாஸ்டர் Paul Yonggi Cho அவர்களால் உருவாக்கப்பட்ட பங்குத்தள நற்செய்தி அறிவிப்பு இயக்கம், தற்போது, அமெரிக்க ஐக்கிய நாடு, இத்தாலி, அயர்லாந்து, ஆஸ்திரேலியா உட்பட பல நாடுகளில் தனது உறுப்பினர்களைக் கொண்டுள்ளது.  

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.