2015-09-01 16:47:00

இலங்கைப் போரில் காணாமல் போனவர்கள் விசாரணை நிறைவு


செப்.01,2015. இலங்கை உள்நாட்டுப் போரின்போது காணாமல் போனவர்கள் குறித்து நடத்தப்பட்ட விசாரணை நிறைவடைந்துவிட்டது என்று, அந்த விசாரணை அமைப்பின் தலைவர் மேக்ஸ்வெல் பரனகாமா தெரிவித்துள்ளார்.

இலங்கையில், கடந்த 1990 ஜூன் முதல் 2009 மே வரை காணாமல் போனவர்கள் குறித்து விசாரணை நடத்த 2013 ஆகஸ்ட் மாதம், சிறப்பு அமைப்பு ஒன்று, ஓய்வுபெற்ற நீதிபதி மேக்ஸ்வெல் பரனகாமா தலைமையில், அமைக்கப்பட்டது. 

வடக்கு மற்றும் கிழக்குப் பகுதி மக்களிடம் கடந்த இரண்டு ஆண்டுகளாக விசாரணை நடத்திய இந்த அமைப்பு, கடந்த ஏப்ரலில் தனது முதல்கட்ட அறிக்கையை இலங்கை அரசுத் தலைவரிடம் தாக்கல் செய்ததைத் தொடர்ந்து, இறுதி அறிக்கை ஆகஸ்டில் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இதுகுறித்து நீதிபதி மேக்ஸ்வெல் பரனகாமா அளித்த பேட்டியில்,  கூறியதாவது: எங்களது விசாரணையை ஏறக்குறைய நிறைவு செய்துவிட்டோம். எனினும் அதிபரிடம் எப்போது இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்பதை உறுதியாகக் கூற முடியாது.

அரசுத் தலைவர் மைத்ரிபால சிறிசேனாவுக்கு தற்போது வேலைப்பளு அதிகமாக உள்ளதால், இறுதி அறிக்கையை தாக்கல் செய்வதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளதகவும், அரசுத் தலைவரிடம் அறிக்கையை அளித்த பிறகு, அதனை பகிரங்கமாக வெளியிடுவதா, வேண்டாமா என்பது குறித்து அவரே முடிவு செய்வார் என்றும் கூறினார்.

இந்த அதிகாரப்பூர்வ அமைப்பின் அதிகாரப்பூர்வ இணையதள புள்ளிவிவரத்தின்படி, வடக்கு, கிழக்கு மாநிலங்களிலிருந்து மொத்தம் 17,329 புகார்கள் பெறப்பட்டுள்ளன. பாதுகாப்புப் படையினரின் குடும்பத்தினர் சுமார் 5 ஆயிரம் புகார் மனுக்களை அளித்துள்ளனர். 

ஆதாரம் : BBC/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.