2015-08-31 15:49:00

கொலம்பன் குழுமங்களுக்கு திருத்தந்தை:அமைதிக்கு உழையுங்கள்


ஆக.31,2015. புனித கொலம்பன் இறந்ததன் 1400ம் ஆண்டை சிறப்பிக்கும் விதமாக இத்தாலியின்  Bobbio எனுமிடத்தில் கூடியிருக்கும் ஐரோப்பிய கொலம்பன் குழுமத்தினருக்கு திருத்தந்தையின் வாழ்த்துச் செய்தி அனுப்பப்பட்டுள்ளது.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் பெயரால், திருப்பீடச் செயலர் கர்தினால் பியேத்ரோ பரோலின் அவர்கள், Piacenza ஆயருக்கு அனுப்பியுள்ள செய்தியில், ஐரோப்பிய அமைதி மற்றும் ஒன்றிப்பில் அதிகக் கவனம் செலுத்தி, புனித கொலம்பன் அவர்கள், 600ம் ஆண்டிலேயே திருத்தந்தை பெரிய கிரகரி அவர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தை சுட்டிக் காட்டியுள்ளார்.

புனித கொலம்பன் அவர்களின் செப மற்றும் எளிமையான வாழ்வு, பல இளையோரை, துறவு வாழ்வுக்கு இட்டுச் சென்றதையும் குறிப்பிட்டுள்ள திருத்தந்தையின் பெயரிலான இச்செய்தி, அயர்லாந்தில் பிறந்து ஐரோப்பாவின் பல்வேறு இடங்களில் துறவியாக நற்செய்தி அறிவித்து, இத்தாலியில் இறையடி சேர்ந்த புனித கொலம்பன் அவர்கள், ஐரோப்பாவின் தந்தையர்களுள் ஒருவராக கருதப்படத்தக்கவர் என  முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள் குறிப்பிட்டதையும் சுட்டிக்காட்டியுள்ளது.

புனித கொலம்பன் பெயரிலான குழுமங்கள், தொடர்ந்து ஆற்றிவரும் பணிகளுக்காக தன் நன்றியையும் இச்செய்தி மூலம் தெரிவித்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ். 

ஆதாரம் :  வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.