2015-08-26 16:38:00

திருத்தந்தையின் தலைமையில் இயற்கையை பாதுகாப்பதற்கான செப நாள்


ஆக.26,2015. செப்டம்பர் மாதம் முதல் தேதி, அதாவது வருகிற செவ்வாய்க் கிழமையன்று சிறப்பிக்கப்படவிருக்கும் 'இயற்கையை பாதுகாப்பதற்கான உலக செப நாள்’ குறித்து புதன் மறைக்கல்வி உரையின் இறுதியில் நினைவூட்டினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இப்புதன் மறைக்கல்வி உரையில் கலந்துகொண்ட ஏறக்குறைய முப்பதாயிரம் மக்களிடம், இச்செப நாளை நம் ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவ சகோதரர்களுடனும், நல்மனம் கொண்டவர்களுடனும் இணைந்து நாம் சிறப்பிக்க உள்ளோம் என்றார் திருத்தந்தை. மனித குலம் இந்நாள்களில் எதிர்நோக்கிவரும் சுற்றுச்சூழல் நெருக்கடிகளுக்குத் தீர்வு காண்பதற்கு, நம் பங்களிப்பை வழங்க ஆவல் கொண்டுள்ள இவ்வேளையில், உலகிலுள்ள தலத்திருஅவைகள் இந்நாளின் முக்கியத்துவத்தை உணர்ந்து, அதனைச் சிறப்பிக்க பல்வேறு வழிகளில் திட்டங்களைத் தீட்டியுள்ளன எனவும் எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், செப்டம்பர் முதல் தேதி மாலை 5 மணிக்கு, உரோம் நகரின் தூய பேதுரு பசிலிக்காவில், திருப்பீட அதிகாரிகள் அனைவருடன் இணைந்து, தான் நிறைவேற்ற உள்ள இறைவார்த்தை வழிபாட்டில், அனைவரும் கலந்து கொள்வதற்கான அழைப்பையும் முன்வைத்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.