2015-08-25 15:52:00

திருத்தந்தை வழியில் நடக்க அமெரிக்க மக்களுக்கு அழைப்பு


ஆக,25,2015. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் விசுவாசம் மற்றும் பணிவாழ்வைப் பின்பற்றுவதற்குத் தங்களை அர்ப்பணிப்பதன் வழியாக அவரது திருத்தூதுப் பயணத்திற்குத் தயார் செய்யுமாறு வாஷிங்டன் உயர் மறைமாவட்டம் மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

வருகிற செப்டம்பரில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அமெரிக்க ஐக்கிய நாட்டுக்குத் திருத்தூதுப் பயணம் மேற்கொள்ளவிருப்பதை முன்னிட்டு 'Walk With Francis' என்ற இணையதளத்தைத் தொடங்கியுள்ள வாஷிங்டன் உயர் மறைமாவட்டம், நம்பிக்கையை நிலைநாட்டுவது அனைத்தும், ஒரு நல்ல மனிதரைச் சார்ந்துள்ளது என்றுரைத்துள்ள  திருத்தந்தையின் கூற்றையும் குறிப்பிட்டுள்ளது.

இந்த இணையதளம் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து, ஏறக்குறைய மூவாயிரம் பேர், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் விசுவாசம் மற்றும் பணிவாழ்வைப் பின்பற்றுவதற்கு உறுதி எடுத்துள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த இணையதளம், செபம், சேவை, செயல்பாடு ஆகிய மூன்று பிரிவுகளைக் கொண்டுள்ளது. செபமாலை செபிப்பதற்குக் கற்றல், கருணைக் கொலையை எதிர்க்கும் குழுவோடு இணைதல், இன்னும் பிற நடவடிக்கைகளுக்கு மக்கள் தங்களை அர்ப்பணிப்பதற்கு உறுதி எடுத்துள்ளனர்.

வருகிற செப்டம்பர் 22 முதல் 27 வரை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அமெரிக்க ஐக்கிய நாட்டுக்குத் திருத்தூதுப் பயணம் மேற்கொள்ளவிருக்கிறார்.

ஆதாரம் : Zenit / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.