2015-08-25 14:52:00

கடுகு சிறுத்தாலும்... விண்ணகத்தில் வீடுகட்ட ...


செல்வந்தர் ஒருவர் மரணமடைந்தார். அவரை வான்வீட்டின் வாசலில் வரவேற்ற புனித பேதுரு, அவரை விண்ணகத்திற்குள் கூட்டிச்சென்றார். போகும் வழியில், பல அழகிய, உயரமான மாளிகைகளைக் கண்ட செல்வந்தர், தனக்குக் கிடைக்கப்போகும் மாளிகையைப் பற்றிய கற்பனையில், உற்சாகத்துடன் நடந்து கொண்டிருந்தார்.

புனித பேதுருவுடன் பல தெருக்களை வலம் வந்த செல்வந்தர், இறுதியாக சிறியதொரு ஓலைக் குடிசைக்கு முன் நிறுத்தப்பட்டார். அந்தக் குடிசையை செல்வந்தரிடம் காட்டி, "நீங்கள் வாழப் போகும் வீடு இதுதான்" என்று புனித பேதுரு சொன்னதும், செல்வந்தர் பெரும் அதிர்ச்சி அடைந்தார்.

தான் உலகில் வாழ்ந்த வீடு, இதைவிட பல்லாயிரம் மடங்கு விலையேறப் பெற்றது என்று செல்வந்தர் புனித பேதுருவிடம் முறையிட்டார். புனித பேதுரு அவரிடம், "உலகிலிருந்து மனிதர்கள் அனுப்பிவைப்பதைக் கொண்டு மட்டுமே இங்கு எங்களால் வீடுகளைக் கட்டமுடியும். நீங்கள் உலகிலிருந்தபோது எங்களுக்கு என்ன அனுப்பி வைத்தீர்களோ, அவற்றைக் கொண்டு, எங்களால் உருவாக்க முடிந்தது, இந்த இல்லம் மட்டுமே" என்று பதிலளித்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.