2015-08-22 16:25:00

தமிழகத்தின் சிறுமலையில் 650 மூலிகைகள்


ஆக.22,2015. திண்டுக்கல் மாவட்டம் சிறுமலையில் மருத்துவ குணமுள்ள 650 மூலிகைகள் இருப்பதாக, காந்திகிராம பல்கலைக்கழக உயிரியியல் பேராசிரியர் இராமசுப்பு அவர்கள் தலைமையிலான குழுவினர் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

மூலிகை சேகரிப்பு மலைவாழ் மக்களின் முக்கிய தொழிலாக உள்ளது என்றும், காட்டுத்தீ, முறையற்ற சேகரிப்பு போன்ற காரணங்களால் சில மூலிகைகள் அழிந்து வருகின்றன என்றும், அவற்றைக் காப்பதற்குத் தேவையான முயற்சிகளை எடுத்துள்ளோம் என்றும் கூறினார் பேராசிரியர் ராமசுப்பு.

சிறுமலையிலுள்ள 650க்கும் மேற்பட்ட மூலிகைகளில், வில்லோ டாப்பி, கோல்சியம், டிஜிட்டாலிஸ், நித்ய கல்யாணி, சின்கோனா, ஊமத்தம், கேம்போதீகா, ஆடாதோடா, ஆரோக்ய பச்சை, வெண் குந்திரிகத்தி, சர்ப்பகந்தி போன்ற முக்கிய மருந்துகள் தயாரிக்கக்கூடிய மூலிகைகள் காணப்படுகின்றன என்று அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

உலகில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மூலிகைகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளன. இந்தியாவில் 7 ஆயிரமும், தமிழகத்தில் 2 ஆயிரம் மூலிகைகளும் உள்ளன. இந்த மூலிகைகளில் தயாரிக்கப்படும் மருந்துகள் மனிதர்களுக்கு மட்டுமின்றி விலங்குகளுக்கும் பயன்படுகின்றன. அலோபதி மருத்துவத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மூலிகை மருந்துகள் பயன்படுகின்றன. இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு 960 மூலிகைகள் ஏற்றுமதியாகின்றன.

இந்த மூலிகைகள் ஆண்டிற்கு 100 டன் வரை ஏற்றுமதியாகின்றன. இதன்மூலம் 100 கோடி ரூபாய் வருமானம் கிடைக்கிறது. சிறுமலையில் 1,050 தாவர வகைகள் உள்ளன.

ஆதாரம் : தினமலர் / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.