2015-08-21 15:45:00

உலகில் சூரிய ஆற்றலில் இயங்கும் முதல் விமான நிலையம்


ஆக.21,2015. உலகிலேயே முழுவதும் சூரிய ஆற்றலில் இயங்கும் முதல் விமான நிலையமாக, கேரளாவின் கொச்சி பன்னாட்டு விமான நிலையம் மாறியுள்ளது.

கொச்சி பன்னாட்டு விமான நிலையத்தின் கார்கோ வளாகத்தில் 45 ஏக்கர் பரப்பளவில் 46,150 சூரியத் தகடுகளை உள்ளடக்கிய 12 மெகாவாட் சூரிய ஆற்றல் மின் உற்பத்தி நிலையத்தை கேரள முதல்வர் Oommen Chandy அவர்கள் கடந்த செவ்வாயன்று திறந்து வைத்தார்.

இதில் இருந்து ஒவ்வொரு நாளும் 50 ஆயிரம் முதல் 60 ஆயிரம் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் என்றும், தொழில்நுட்ப முறைப்படி, இவ்விமான நிலையத்தை முழுவதும் சூரிய மின் ஆற்றலால் இயக்குவதற்கு முயற்சி எடுக்கப்பட்டுள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.

கொச்சி பன்னாட்டு விமான நிலையத்தை சூரிய மின் ஆற்றலால் இயக்கும் முயற்சி 2013ம் ஆண்டிலேயே துவங்கியது. முதலில் பயணிகள் வந்து சேரும் பிரிவின் மேற்கூரையில் நூறு கிலோவாட் தகடுகள் அமைக்கப்பட்டு, மின் உற்பத்தி துவங்கியது. அதன் பிறகு தகடுகளின் எண்ணிக்கை சிறிது சிறிதாக அதிகரிக்கப்பட்டது. கொல்கத்தாவைச் சேர்ந்த விக்ரம் சோலார் என்ற நிறுவனம் இத்தகடுகளை நிறுவி வருகிறது.

மூன்று மெட்ரிக் டன் நிலக்கரியை எரித்து, அதன் மூலம் எவ்வளவு கரியமில வாயு வெளியாகுமோ அந்த அளவு பாதிப்பை இன்னும் 25 ஆண்டுகளில் இந்த சூரிய மின் ஆற்றல் நிலையம் குறைக்கும். இது ஏறக்குறைய 30 இலட்சம் மரங்கள் நடுவதற்குச் சம்மாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : PTI / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.