2015-08-19 15:15:00

கடுகு சிறுத்தாலும்..: வெற்றிக் களிப்பு வெகுநேரம் நிலைக்காது


பேரரசர் நெப்போலியன், போரில் பெற்ற மாபெரும் வெற்றியால் பெருங்களிப்பில் இருந்தார். அந்த வெற்றிக்குப் பேருதவியாக இருந்த அவரது நான்கு தளபதிளையும் அழைத்து "உங்களுக்கு என்ன வேண்டுமானாலும் கேளுங்கள்" என்று கூறினார்.

முதல் தளபதி, பாரிஸ் நகரத்தில் ஒரு வீட்டையும், இரண்டாவது தளபதி, தான் சொந்தமாக நடத்திட ஒரு தங்கும் விடுதியையும், மூன்றாம் தளபதியோ, தனக்கு திராட்சை மது செய்யும் தோட்டமும், தொழிற்சாலையும் வேண்டும் என்று கேட்டனர். அனைத்திற்கும் மாமன்னர் நெப்போலியன் சிரித்துக் கொண்டே மகிழ்ச்சியுடன் ஏற்பாடு செய்வதாகக் கூறினார். கடைசித் தளபதி நெப்போலியனிடம் வந்து, தனக்கு இரண்டு வார விடுப்பு பரிசாக வேண்டும் என்று கேட்டார். அதற்கு மன்னர் நெப்போலியன், "உன் விடுப்பு, நாளை முதல் தொடங்கும்" என்றார். வெளியே வந்த தளபதிகளில் முதல் மூவரும் நான்காமவரைப் பார்த்து, "சரியான முட்டாளாக இருக்கிறாயே! ஏதாவது விலை மதிப்புள்ளதாகக் கேட்காமல் இருவார விடுமுறையைப் போய் கேட்டாயே?" என்று ஏளனம் செய்தார்கள். அதற்கு அவர், "நண்பர்களே! நீங்கள் கேட்டதையெல்லாம் மன்னர் ஏற்பாடு செய்து தருவதாகத்தான் கூறியிருக்கிறார். இன்னும் அவை உங்கள் கையில் கிடைக்கவில்லை. தான் கொடுத்த வாக்குறுதிகளை நேரடியாகச் செயல்படுத்த மன்னருக்கு நேரமிருக்கப் போவதில்லை. அவரது செயலரைத்தான் பணிக்கப் போகிறார். செயலரோ, ஆயிரம் வேலை செய்பவர். அவரும், அவருக்குக் கீழ் வேலை செய்பவர்களுக்குத்தான் இந்த வேலைகளைக் கொடுப்பார். உங்களுக்கு அளிக்கப்பட்ட பரிசுகளுக்கான வாக்குறுதிகளின் முக்கியத்துவம், இவ்வாறு, கீழே ஆணைகள் செல்லச் செல்ல, கரைந்து கொண்டே போய் மறக்கப்படும் வாய்ப்புகள் அதிகம்" என்றார். மற்ற தளபதிகளோ, "அப்படி நடந்தால் மன்னரிடம் போய் முறையிடலாம்தானே" என்றார்கள். நான்காம் தளபதி சொன்னார், "நண்பர்களே, மன்னருக்கு இன்றைக்கு இருக்கும் வெற்றிக் களிப்பு வெகுநேரம் நிலைக்காது. போரில் பெற்ற வெற்றியின் மதிப்பு, நாளடைவில் மற்ற பிரச்சனைகளுக்கு இடையே ஒளியிழந்து போகும். அதோடல்லாமல், இந்தக் கணத்தில், உங்கள் துறையின் வெற்றி மட்டுமே அவர் கண்முன் நிற்கிறது. நாளை உங்கள் துறையில் ஏதாவது தவறு நடந்தால், நீங்கள் தலை நிமிர்ந்து அவர் முன் நின்று உங்கள் பரிசை உரிமையுடன் நினைவுறுத்த இயலாது. ஆனால் நான் கேட்ட பரிசோ, இப்போது என் கையில்" என்றார். இதைக் கேட்ட மற்றவர்கள் திகைத்துப்போய் நின்றனர். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.