2015-08-13 16:13:00

எப்பாவமும் அறியாத உயிர்களைக் கொல்வது, மிகப் பெரும் கொடுமை


ஆக.13,2015 இன்றைய உலகைத் துன்புறுத்தி வரும் பல்வேறு கொடுமைகளில், எப்பாவமும் அறியாத உயிர்களைக் கொல்வது மிகப் பெரும் கொடுமை என்று அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர் ஒருவர் கூறினார்.

Planned Parenthood என்ற பெயரில் கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாக, அமெரிக்க ஐக்கிய நாட்டில் இயங்கி வரும் ஒரு மருத்துவ அமைப்பு, குடும்ப நலம் என்ற அடிப்படையில் செய்துவரும் கருக்கலைப்புக்களில், வர்த்தக உள்நோக்கம் இருப்பதாகக் காட்டும் இரகசிய வீடியோக்கள் அண்மையில் வெளியாகி உள்ளன.

ஜூலை மாதம் முதல் வெளியாகிவரும் இந்த அதிர்ச்சியூட்டும் வீடியோக்கள் குறித்தும், Planned Parenthood குறித்தும், பிலடெல்பியா பேராயர், Charles Chaput அவர்கள், செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தபோது இவ்வாறு கூறினார்.

கருக்கலைப்பின் வழியே திரட்டப்படும் குழந்தைகளின் உடல் பாகங்கள் பல, விற்பனையாவது பற்றி வெளியாகியுள்ள இந்த வீடியோக்கள், மனித உயிர் குறித்து நாம் கொண்டிருக்கும் மதிப்பை ஆய்வு செய்ய அழைக்கின்றன என்று பேராயர் Chaput அவர்கள், எடுத்துரைத்தார்.

சராசரி அமெரிக்க மக்கள் செலுத்தும் வரிப்பணத்தைக் கொண்டு, மனித உயிர்களுக்கு எதிராக நடத்தப்படும் அனைத்து முயற்சிகளையும் மீளவும் ஆய்வு செய்வது நாட்டிற்கு நல்லது என்றும் பேராயர் Chaput அவர்கள் வலியுறுத்தினார்.

கருவில் உருவானது முதல், கல்லறை முடிய, எந்த நிலையிலும், மனித உயிர்கள் மதிக்கப்பட வேண்டும் என்பது, கத்தோலிக்கத் திருஅவையின் அசைக்க முடியாத கொள்கை என்பதை இவ்வுலகம் புரிந்துகொள்ள வேண்டும் என்றும் பேராயர் Chaput அவர்கள் தன் பேட்டியில் குறிப்பிட்டார்.

ஆதாரம் : CNA /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.