2015-08-06 15:59:00

கிழக்கு தீமோர் மக்களுக்கு திருத்தந்தையின் வாழ்த்துச் செய்தி


ஆக.06,2015. "நம் கிறிஸ்தவக் குடும்பங்களில் பல புண்ணிய முயற்சிகளைக் கற்றுக்கொள்கிறோம்; அனைத்துக்கும் மேலாக, எவ்விதப் பதிலிருப்பையும் எதிர்பாராமல், அன்பு செய்வதைக் கற்றுக்கொள்கிறோம்" என்ற வார்த்தைகளை, ஆகஸ்ட் 6, இவ்வியாழனன்று, தன் Twitter செய்தியாக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டார்.

மேலும், ஆகஸ்ட் 15, வருகிற சனிக்கிழமை, கிழக்கு தீமோர் குடியரசில், நற்செய்தி அறிவிக்கப்பட்ட 5ம் நூற்றாண்டு விழாவில் கலந்துகொள்ள, திருப்பீடச் செயலர், கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்களை, தன் பிரதிநிதியாக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் நியமித்து, கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

மறைபரப்புப் பணியாளர்களின் துணிவுமிக்க, அயராத உழைப்பினால், கிழக்கு தீமோர் நாட்டில் நற்செய்தி அறிவிக்கப்பட்டதைக் கொண்டாடும் அந்நாட்டு மக்களையும், ஆயர் பேரவையையும் இறைவன் ஆசீர்வதிக்க வேண்டுமென்று திருத்தந்தை இம்மடலில் குறிப்பிட்டுள்ளார்.

அன்னை மரியா விண்ணேற்பு அடைந்த நாளான ஆகஸ்ட் 15ம் தேதியன்று, கிழக்கு தீமோரின் தலைநகரான Diliயில், இந்த நூற்றாண்டு கொண்டாடப்படும் வேளையில், அந்த அன்னை, விண்ணிலிருந்து, கிழக்கு தீமோர் மக்கள் மீது இறைவனின் அருள் வளங்களை பொழிந்தருள தனது செபம் கலந்த ஆசீரையும் திருத்தந்தை இம்மடலில் கூறியுள்ளார்.

ஆசியாவில், பிலிப்பின்ஸ் நாட்டிற்கு அடுத்தபடியாக, அதிகமான கத்தோலிக்கர்களைக் கொண்ட நாடென கருதப்படும் கிழக்கு தீமோர் நாட்டில், 88.4 விழுக்காடு மக்கள் கத்தோலிக்கர்களாக உள்ளனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.