2015-07-28 11:28:00

கடுகு சிறுத்தாலும்... குறைகளையும் நிறைகளாக மாற்றும் சக்தி


பல ஆண்டுகளுக்கு முன், அமெரிக்க ஐக்கிய நாட்டின் டெக்சஸ் (Texas) மாநிலத்தில் நடைபெற்ற ஒரு வழக்கு, இந்த உண்மையை நம் உள்ளத்தில் பசுமரத்தாணியைப் போல் பதிக்கிறது.

டெக்சஸ் மாநில நீதி மன்றத்தில் ஒரு வழக்கு  விசாரணைக்கு வந்தது. கைகளும், கால்களும் இல்லாத நிலையில் வாழ்ந்துவந்த ஒரு தாய், தன் 5 மாதக் குழந்தையைக் காப்பாற்ற முடியாது என்று அம்மாநில அரசு தீர்மானம் செய்தது. தன்னால் முடியும் என்று நிரூபிக்க, அந்தத் தாய் நீதிமன்றத்தை நாடினார். வழக்கு ஆரம்பமானதும், அந்தத் தாய் நீதிமன்றத்தில் செய்தது, அனைவரையும் ஆனந்த அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

கைகளும், கால்களும் இல்லாத அந்தத் தாய், தன் உதடுகள், நாவு இவற்றின் உதவியுடன், அவருக்கு முன் படுத்திருந்த குழந்தையின் துணிகளைக் கழற்றி, மீண்டும் புதுத்துணியை மாட்டிவிட்டார். குழந்தைக்குத் தேவையான உணவை ஊட்டிவிட்டார்.

இதைக் கண்ட நீதிபதி, தன் இருக்கையைவிட்டு எழுந்து நின்று, அந்தத் தாயை வணங்கினார். பின்னர் அவர், "திறமைகளை உடல் அளவில் பெற்றிருப்பது, உண்மையின் ஒரு சிறு பகுதிதான்; உள்ளத்தில் பெற்றிருக்கும் உறுதியே, உண்மையான திறமை என்பதை, எங்கள் அனைவருக்கும் உணர்த்திய உங்களுக்கு நன்றி" என்று கூறினார்.

குறைகள், நிறைகள் இரண்டும் ஒவ்வொரு மனிதருக்கும் தரப்பட்டுள்ள கொடைகள். குறைகள்...கொடைகளா? என்ற கேள்வி எழலாம். ஆம், குறைகளும் கொடைகள்தாம். குறைகளையும் நிறைகளாக மாற்றும் சக்தி நம் ஒவ்வொருவரிடமும் உள்ளது. 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.