ஜூலை,25,2015. பிரான்ஸ் தலைநகர் பாரிசில் வாழ்ந்து வரும் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட இளம்பெண் ஒருவர், எவ்வித மருத்துவ சிகிச்சையும் இல்லாமல் நோயைக் கட்டுப்படுத்தி வருவது மருத்துவர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
பிறக்கும்போதே எய்ட்ஸ் உயிர் கொல்லி நோயால் பாதிக்கப்பட்டிருந்த இந்த இளம்பெண்ணுக்கு, இந்நோயிற்காக 6 வயது முதல் தகுந்த சிகிச்சை அளிக்கப்பட்டு வந்துள்ளது. ஆனால், அதற்குப்பின் சிகிச்சையைத் தொடராத அவர் மருத்துவமனைக்குச் செல்வதையே நிறுத்தியுள்ளார்.
தற்போது, 18 வயது நிறைவடையும் நிலையில் உள்ள அந்தப் பெண்ணை மருத்துவர்கள் பரிசோதனை செய்தபோது வியப்பில் ஆழ்ந்துள்ளனர்.
கடந்த 12 ஆண்டுகளாக எய்ட்ஸ் நோய்க்கு எவ்வித சிகிச்சையும் எடுக்காத நிலையில், அவர் தன்னுடைய நோய் மேலும் பரவாமலும், ஆபத்தாக மாறாமலும் கட்டுக்குள் வைத்திருப்பது மருத்துவர்களுக்குத் தெரியவந்துள்ளது.
இதற்கான காரணம் மருத்துவர்களுக்கு புரியாத புதிராக இருந்தாலும்கூட, இளம்பெண்ணின் உடலுக்குள் இயற்கையாகவே எய்ட்ஸ் நோயைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் இருக்கிறதா என்ற சந்தேகமும் மருத்துவர்களுக்கு எழுந்துள்ளது.
இதுபோன்ற நோய் உடைய மிசிசிபியைச் சேர்ந்த பெண் ஒருவர் 27 மாதங்களாக சிகிச்சை எடுத்துக்கொள்ளாமல் எய்ட்ஸ் நோயைக் கட்டுப்படுத்தியுள்ளார்
ஆதாரம் : பிபிசி /வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©. |