2015-07-20 17:01:00

ஆசியா பீபியின் விடுதலைக்கு விண்ணப்பிக்க இறுதி அனுமதி


ஜூலை,20,2015.  தேவ நிந்தனைக் குற்றச்சாட்டின்பேரில் பாகிஸ்தானில் கடந்த ஆறு ஆண்டுகளாக சிறைவைக்கப்பட்டிருக்கும் ஆசியா பீபி, தன் விடுதலைக்கு விண்ணப்பிக்க இப்புதனன்று இறுதி வாய்ப்பு வழங்கப்பட உள்ளதையொட்டி அவருக்காக சிறப்பான விதத்தில் செபிக்குமாறு அழைப்பு விடுத்துள்ளது பிரித்தானிய பாகிஸ்தான் கிறிஸ்தவ அமைப்பு.

'என் கடவுள் எனக்காக இறந்தார். உங்கள் இறைவாக்கினர் முகமது உங்களுக்காக என்ன செய்தார்?' என்ற ஒரு வாக்குவாதத்தில் ஓர் இஸ்லாமியரிடம் கேட்ட ஒரே காரணத்திற்காக தேவ நிந்தனைக் குற்றம் சுமத்தப்பட்டு மரணதண்டனை வழங்கப்பட்ட  ஆசியா பீபி, இறுதி முறையாக தன் விடுதலைக்கு இப்புதனன்று விண்ணப்பிக்க  பாகிஸ்தான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

ஐந்து குழந்தைகளுக்கு தாயான இந்த 50 வயது கிறிஸ்தவப் பெண், ஆறு ஆண்டுகளைச் சிறையில் செலவிட்ட பின்னர், தற்போது இவரின் விடுதலைக்கு விண்ணப்பிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இவரின் விடுதலைக்காக உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் செபிக்குமாறு அழைப்பு விடுத்துள்ள BCPA எனும் பிரித்தானிய பாகிஸ்தான் கிறிஸ்தவ அமைப்பு, விண்ணப்பிக்க பாகிஸ்தான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளதே ஒரு நம்பிக்கைதரும் நடவடிக்கை என உரைத்தது.

பாகிஸ்தான் நீதிமன்றம் ஆசியா பீபியை விடுதலை செய்தால், அவரைக் கொல்பவர்களுக்கு ஐயாயிரம் டாலர் பரிசுத் தொகை வழங்கப்படும் என பாகிஸ்தான் இஸ்லாமிய குருக்கள் சிலர் அறிவித்து, ஆசியா பீபியின் உயிருக்கு அச்சுறுத்தலை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

ஆதாரம் : Christianglobe/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.