2015-07-15 17:49:00

திருத்தந்தையின் திருத்தூது பயணம் குறித்து லொம்பார்தி


ஜூலை,15,2015. இலத்தீன் அமெரிக்க நாடுகளில் திருத்தந்தையைக் காண வந்திருந்த மக்கள், வெறும் உணர்வளவில் மட்டும் அவரைக் காண வரவில்லை, அவர்கள் வெளிப்படுத்திய நம்பிக்கை உணர்வு தன்னை அதிகம் ஈர்த்தது என்று திருப்பீடச் செய்தித் தொடர்பாளர் அருள்பணி பெதெரிக்கொ லொம்பார்தி அவர்கள் கூறினார்.

ஜூலை 5ம் தேதி முதல், 13ம் தேதி முடிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஈக்குவதோர், பொலிவியா மற்றும் பரகுவாய் ஆகிய இலத்தீன் அமெரிக்க நாடுகளில் மேற்கொண்ட திருத்தூது பயணம் குறித்து வத்திக்கான் வானொலிக்கு அளித்த பேட்டியில் அருள்பணி லொம்பார்தி அவர்கள் இவ்வாறு கூறினார்.

இந்த மூன்று நாடுகளில் மக்களுடன் திருத்தந்தை மேற்கொண்ட சந்திப்புக்களில், ‘தன் ஆடுகளின் நறுமணத்தை உணர்ந்த ஆயர்களாக வாழவேண்டும்’ என்று திருத்தந்தை பிரான்சிஸ் கூறிய வார்த்தைகளின் பொருளை, நேரடியாகக் காண முடிந்தது என்று அருள்பணி லொம்பார்தி அவர்கள் எடுத்துரைத்தார்.

வறுமைப்பட்ட இலத்தீன் அமெரிக்க நாடுகள், பிறரிடமிருந்து பொருளுதவியை எதிர்பார்த்திருக்கும் நாடுகள் என்று ஐரோப்பிய நாடுகள் கொண்டிருக்கும் கண்ணோட்டத்தை மாற்றி, இந்நாடுகளிலிருந்து ஆக்கப்பூர்வமான, தலைமைத்துவமான செயல்பாடுகள் வெளியாகும் என்ற கண்ணோட்டம் இந்த பயணத்தின்போது தெளிவானது என்றும் அருள்பணி லொம்பார்தி அவர்கள் தன் பேட்டியில் வலியுறுத்தினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.