2015-07-14 14:57:00

கடுகு சிறுத்தாலும்... மழை பொழிய மறந்த மேகங்கள்...


ஜோசியத்தில் மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்த அந்த ஊருக்கு வந்த ஒரு ஜோசியர், அடுத்த 10 ஆண்டுகளுக்கு அந்த ஊரில் மழைபெய்யாது என்று சொன்னார். இதைக் கேட்ட ஊர் மக்கள் மிகவும் மனம் உடைந்து, தங்கள் கலப்பைகளை விறகாக உடைத்து, எரித்துவிட்டு, வீட்டுக்குள் முடங்கிக் கிடந்தனர்.

ஊரில் ஒரே ஒருவர் மட்டும், தினமும் தன் நிலத்திற்குச் சென்று உழுது வந்தார். அவர் உழுவதைக் கண்ட மேகங்கள் அவரிடம், "நாங்கள் 10 ஆண்டுகள் மழைபெய்யப் போவதில்லை என்று ஜோசியர் சொன்ன பிறகும் நீ ஏன் உழுதுகொண்டிருக்கிறாய்?" என்று கேட்டன. அதற்கு அந்த விவசாயி, "பத்தாண்டுகள் நான் உழுவதை நிறுத்திவிட்டால், எனக்கு உழுவது எப்படி என்பதே மறந்துவிடும். பிறகு, நீங்கள் மழை பெய்யும்போது நிலத்தை உழத் தெரியாமல் திகைத்து நிற்பேன். எனவேதான் தொடர்ந்து உழுது வருகிறேன்" என்று பதில் சொன்னார்.

இதைக் கேட்ட மேகங்கள், "ஆஹா, பத்தாண்டுகள் மழை பெய்யாமல் இருந்தால், மழை பொழிவது எப்படி என்பதை நாமும் மறந்துவிடுவோமே!" என்று ஒருவருக்கொருவர் சொல்லிக்கொண்டு, அடுத்த நாளே மழையைப் பொழிந்தன.

நல்லது நடக்கும் என்று நம்புவோருக்கு, நாளும், கோளும் தேவையில்லை.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.