2015-07-04 16:22:00

பொதுக்காலம் 14ம் ஞாயிறு - ஞாயிறு சிந்தனை


ஜூலை,04,2015. "இப்போது நாங்கள் எங்கே செல்வது?" (w halla' la wayn / Where Do We Go Now?) என்பது 2011ம் ஆண்டு லெபனான் நாட்டில் உருவான ஒரு திரைப்படம். பல திரைப்பட விழாக்களில் பரிசுகளைப் பெற்ற திரைப்படம் இது. இஸ்லாமியருக்கும், கிறிஸ்தவர்களுக்கும் இடையே உள்ள உறவுப் பிரச்சனைகளை மையப்படுத்தி எடுக்கப்பட்ட திரைப்படம்.

ஒரு கிராமத்தில் கிறிஸ்தவரும் இஸ்லாமியரும் எவ்வித பாகுபாடும், கருத்து வேறுபாடும் இன்றி மகிழ்வுடன் வாழ்ந்து வருகின்றனர். நாளடைவில், உலகின் வேறு பகுதிகளில் நடைபெறும் மதக்கலவரங்கள் பற்றியச் செய்திகள் இந்த கிராமத்து மக்களையும் பாதிக்கின்றன. பாகுபாடுகள் எழுகின்றன. இந்தப் பாகுபாடுகளை விரும்பாத அந்த கிராமத்து அன்னையர், ஊரில் ஒற்றுமை நிலவப் பாடுபடுகின்றனர். இளையோரும் ஆதரவு தருகின்றனர். இந்தச் சூழலில், அந்த கிராமத்து இளைஞன் ஒருவர் பக்கத்து ஊருக்குச் ஏதோ ஒரு வேலையாகச் செல்கிறார். அங்கு நடந்த ஒரு மதக்கலவரத்தில் அவர் சுட்டுக் கொல்லப்படுகிறார். அவரது உடல் கிராமத்திற்குக் கொண்டுவரப்படுகிறது.

தங்கள் நண்பனின் உடலைப் புதைப்பதற்கு அந்த கிராமத்து இளையோர் செல்கின்றனர். இஸ்லாமியரும், கிறிஸ்தவர்களும் இணைந்துசெல்லும் அந்த இளையோர் கூட்டம் கல்லறையை அடைகிறது. அங்கு கிறிஸ்தவர்களுக்கும், இஸ்லாமியருக்கும் தனித் தனி கல்லறைகள் பிரிக்கப்பட்டுள்ளன. அருகருகே இந்தக் கல்லறைகள் இருந்தாலும், இடையே செல்லும் பாதை இரு கல்லறைகளையும் பிரித்துக் காட்டுகிறது. அந்தப் பாதையில் தங்கள் நண்பனின் உடலைச் சுமந்து செல்லும் இளையோர் திடீரெனத் திரும்பி, இப்போது நாங்கள் எங்கே செல்வது? என்ற கேள்வியை எழுப்புகின்றனர். இந்தக் கேள்வியைத் திரை அரங்கத்தில் உள்ளவர்களை நோக்கிக் கேட்பதுபோல் இக்காட்சி பதிவாகியுள்ளது. இந்தக் கேள்வியோடு திரைப்படம் முடிகிறது.

பிறந்தது முதல் இறக்கும் வரை.... ஏன்? இறந்த பின்னரும் பாகுபாடுகளால் இவ்வுலகைக் கூறுபோட்டு வைத்திருக்கிறீர்களே... இப்போது நாங்கள் எங்கே செல்வது என்று இளையோர் நம்மைக் கேட்கின்றனர். இந்தக் கேள்விக்கு எளிதான விடைகள் கிடைக்காது. ஏக்கம் நிறைந்த இக்கேள்வியின் பின்னணியில் நம் மனதை உறுத்தும் ஓர் அனுபவம் உண்டு. நாம் அனைவரும் வாழ்வில் சந்தித்திருக்கும், அல்லது, சந்திக்கவிருக்கும் அந்த வருத்தமான அனுபவத்தை இன்றைய ஞாயிறு வாசகங்கள் நினைவுறுத்துகின்றன. அந்த அனுபவம்... நிராகரிப்பு, புறக்கணிப்பு! மனித அனுபவங்களிலேயே மிக ஆழமான காயங்களை உருவாக்குவது நிராகரிப்பு, புறக்கணிப்பு. அதிலும், காரணங்கள் எதுவும் இல்லாமல், அல்லது, நமக்குப் புரியாத காரணங்களுக்காக நாம் புறக்கணிக்கப்படும்போது, அந்த வேதனை மிகக் கொடுமையாக இருக்கும்.

தன்னை வெறுத்து, ஒதுக்கி, தனக்கெதிராகக் கிளர்ச்சிசெய்யும் இஸ்ரயேல் மக்களைப்பற்றி இறைவாக்கினர் எசேக்கியலிடம் இறைவனே முறையிடுகிறார். தன் சொந்த ஊருக்குச் சென்ற இயேசுவை, மக்கள் ஏற்றுக்கொள்ளத் தயங்கினார்கள் என்று இன்றைய நற்செய்தியில் நாம் வாசிக்கிறோம்.

சொந்த ஊருக்கு இயேசு திரும்பிவந்த நிகழ்வை மத்தேயு, மாற்கு, லூக்கா ஆகிய மூன்று நற்செய்திகளும் பேசுகின்றன. சொந்த ஊருக்குத் திரும்பிய இயேசு செய்த முதல் செயல்... தொழுகைக் கூடத்தில் பேசியது! இயேசு பேச ஆரம்பித்ததும் அங்கிருந்தவர்கள் வியப்பில் ஆழ்ந்தனர். நேரம் செல்லச் செல்ல, மக்களின் வியப்பு வெறுப்பாக மாறியது.

இந்த மாற்றத்திற்கு முக்கிய காரணம்... மக்கள் இயேசுவைப்பற்றி கொண்டிருந்த முற்சார்பு எண்ணங்கள் (Prejudice). வழக்கு ஆரம்பமாகும் முன்னரே, தீர்ப்பு வழங்கும் அவசர எண்ணங்களே... முற்சார்பு எண்ணங்கள்!

இயேசு பேச ஆரம்பித்தபோது, அவர் என்ன சொன்னார் என்பதை மக்கள் கேட்டதால் மகிழ்வும், வியப்பும் ஏற்பட்டன. ஆனால், விரைவில், அவர்கள் எண்ணங்கள் மாறின. ‘என்ன சொல்கிறார்’ என்பதிலிருந்து, 'யார் சொல்கிறார்' என்று அவர்கள் சிந்திக்க ஆரம்பித்ததும், அவர்கள் வியப்பு வெறுப்பாக மாறியது.

சொல்லப்படும் கருத்தை விட்டுவிட்டு, சொல்பவர் யார் என்ற எண்ணங்கள் எழும்போது, இந்தப் பிரச்சனை உருவாகும். சொல்பவரைப் பற்றிய முற்சார்பு எண்ணங்கள் அதிகம் இருந்தால், இந்தப் பிரச்சனை பெரிதாகி, சொல்லப்பட்ட கருத்துக்களுடன், சொல்பவரும் சேர்த்து ஒதுக்கப்படுவார்.

இயேசு தன் சொந்த ஊருக்குச் சென்றபோது, அவர் புகழ் ஓரளவு பரவியிருந்தது. ஆயினும், ஊர்மக்கள் அவரை இன்னும் பழையவராக, தங்களுக்கு பழக்கமானவராக எண்ணியதால், தடைச் சுவர்கள் எழுந்தன. “பழகப் பழகப் பாலும் புளிக்கும்” என்று தமிழிலும், “Familiarity breeds contempt” என்று ஆங்கிலத்திலும் பழமொழிகள் உண்டு. பெற்றோர், உடன்பிறந்தோர், ஊரில் நம்முடன் வளர்ந்தவர், வாழ்க்கைத் துணை, நமது குழந்தைகள் என்று, நமக்கு மிகவும் நெருங்கியவர்கள் பலரின் அழகான, ஆழமான அம்சங்களைக் காண்பதற்கு, நமது நெருக்கமே ஒரு தடையாகிவிடும். "ஓ, இவர்தானே" என்ற முத்திரைகள் எளிதில் நம் கைவசம் இருக்கும். இயேசுவுக்கும் இத்தகைய 'ரெடிமேட்' முத்திரைகள் குத்தப்பட்டன. "இவர் தச்சர் அல்லவா?, இவர் மரியாவின் மகன்தானே!" என்ற முத்திரைகள் மூலம் ஊர்மக்கள் உள்ளங்களில் இருந்த ஏராளமான முற்சார்பு எண்ணங்கள் சொல்லாமல் சொல்லப்பட்டன.

ஒருவரது பிறப்பையும் அவர் செய்யும் தொழிலையும் வைத்து நாம் உருவாக்கிக்கொள்ளும் அவலமான எண்ணங்கள், ஆதாரமற்ற முடிவுகள் எவ்வளவு தூரம் நமது சமுதாயத்தைப் பாதித்துள்ளன என்பதை நாம் விளக்கத் தேவையில்லை. இத்தகைய முற்சார்பு எண்ணங்களுக்கு இயேசுவே பலியானார் என்பது இன்றைய நற்செய்தி நமக்குத் தரும் ஓர் எச்சரிக்கை!

மக்களின் முற்சார்பு எண்ணங்களுக்குத் தான் பலிகடா ஆகியிருப்பதை உணர்ந்த இயேசு, அர்த்தம் நிறைந்த வார்த்தைகளைச் சொன்னார்: “சொந்த ஊரிலும் சுற்றத்திலும் தம் வீட்டிலும் தவிர மற்றெங்கும் இறைவாக்கினர் மதிப்புப் பெறுவர்.” (மாற்கு 6: 4)

இயேசுவின் இந்தப் பொன்னான வார்த்தைகள், பல்வேறு சூழல்களில், பலராலும் பயன்படுத்தப்பட்டுள்ளன. தன் பிறப்பையும், தொழிலையும் வைத்து, தன்னைக் குறைவாக மதிப்பீடு செய்திருந்த அம்மக்களிடம், இயேசு, தன்னை ஓர் இறைவாக்கினராக ஒப்புமைப்படுத்திப் பேசினார். இயேசுவின் அடையாளம் பிறப்பினாலோ, அவர் செய்த தொழிலாலோ வரவில்லை. இறைவாக்கினராக, இறைவனின் வாக்காக அவர் வாழ்ந்ததே அவருக்குரிய தனி அடையாளம் என்பதைத் தன் சொந்த ஊர் மக்களுக்கும், நமக்கும் நினைவுறுத்துகிறார் இயேசு.

இறைவாக்கினராக வாழ்வது, அன்றும், இன்றும், என்றும், சவால்கள் நிறைந்த வாழ்க்கை. ஓர் இறைவாக்கினருக்கு இருக்கும் சவால்களிலேயே மிகப்பெரும் சவால்.... தன் மனசாட்சியின் குரலுக்கு செவிமடுத்து, அதன்படியே செயல்படுவது... எப்போதும், எந்நிலையிலும், என்ன விலை கொடுத்தாகிலும், தன் மனசாட்சியின் வழியாகப் பேசும் இறைவனின் குரலுக்குச் செவிமடுத்து வாழ்வது, இறைவாக்கினரின் மிகப்பெரும் சவால். இதனால் இறைவாக்கினர் தன் வாழ்வின் பெரும்பாலான நேரங்களில் தனித்தே நிற்க வேண்டியிருக்கும். பத்தோடு பதினொன்றாக, கூட்டத்தோடு கூட்டமாகக் கரைந்து வாழாமல், ஆயிரத்தில் ஒருவராக தனித்து நிற்பது, இறைவாக்கினர்களின் பெரும் சவால்.

இன்றைய உலகம் அழுத்தந்திருத்தமாகச் சொல்லித்தரும் ஒரு முக்கியப் பாடம் - ஊரோடு ஒத்து வாழ்வது. வாழ்க்கையின் குறிக்கோள், மனசாட்சியின் தூண்டுதல் போன்ற அனைத்தையும் மறந்துவிட்டு, அல்லது, அவற்றைப் புதைத்துவிட்டு, பலரும் போகும் பாதையிலேயே பயணம் செய்யத்தூண்டுகிறது, இவ்வுலகம். தனித்து நிற்பதால், மற்றவர்களின் தாக்குதல்களுக்கு எளிதான இலக்காகி விடுவோம், எனவே, கூட்டத்தோடு கூட்டமாக வாழ்வதே பாதுகாப்பு என்று, பலவழிகளில் பாடங்கள் சொல்லித்தருகிறது, இவ்வுலகம். உடை, உணவு, வீடு என்று, வெளி வசதிகளில் ஆரம்பித்து, மதம், அரசியல், கலாச்சாரம் என்ற பல்வேறு துறைகளில், ஒவ்வொருவரும் கொண்டிருக்க வேண்டிய எண்ணங்களை ஒரே மாதிரியான எண்ணங்களாக மாற்ற, வர்த்தக உலகம் வெகுவாக முயன்றுவருகிறது. உலகம் சொல்லித்தரும் பாடங்களிலிருந்து விலகி, தங்கள் குறிக்கோளை அடைய, தங்கள் மனசாட்சியின் குரலுக்குப் பணிய, தங்களுக்கென பாதைகளை உருவாக்கிக் கொள்ளும் பல்லாயிரம் பேர் இன்னும் இவ்வுலகில் இருக்கத்தான் செய்கிறார்கள்.

பழக்கமான, பத்திரமான பாதையில் பலரும் பயணம் செய்யும்போது, புதுப் பாதைகளை வகுத்துக் கொண்டு பயணம் செய்வதைப்பற்றி Robert Frost என்ற ஆங்கிலக் கவிஞர் எழுதிய “பயணிக்காத பாதை” (The Road Not Taken) என்ற கவிதை என் நினைவுக்கு வருகிறது:

அந்த மஞ்சள் காட்டில் இரு பாதைகள் பிரிந்தன

இரண்டிலும் ஒரே நேரத்தில் பயணம் செய்வது

என்னால் முடியாது எனத் தெரியும்.

ஒரு பாதையில் பயணம் துவக்கினேன்,

மற்றொன்றில் பிறகு பயணிக்கலாம் என்று

அப்போது எண்ணியிருந்தேன்.

மற்றொரு பாதையில் பயணிக்க

நான் மீண்டும் இவ்விடம் வருவேனா என்ற

சந்தேகம் எனக்குள்...

நான் சென்ற பாதை...

பலரும் பயன்படுத்தாத, பயணிக்காத பாதை என்று

புரிந்து கொண்டேன்.

பல ஆண்டுகள் சென்று,

நிறைவான ஒரு பெருமூச்சுடன் நான் இதைச் சொல்வேன்:

காட்டில் இரு பாதைகள் பிரிந்தன

மற்றவர் அதிகம் செல்லாத

ஒற்றையடி பாதையில் நான் பயணித்தேன்!

அதுவே என் வாழ்வில்

பெரும் மாற்றங்களை உருவாக்கியது!

பலரும் செல்லாத பாதைகளில் பயணத்தை மேற்கொண்ட வீர உள்ளங்களுக்கு...

அப்பயணங்களின் மூலம் புதிய பாதைகளை அடுத்தத் தலைமுறைகளுக்கு வகுத்துத் தந்த வழிகாட்டிகளுக்கு...

உலகம் காட்டும் வழிகளில் ஓடிக்கொண்டிருக்கும் கூட்டத்திலிருந்து விலகி, இறைவன் காட்டும் வழியில் சென்றதால் புறக்கணிக்கப்பட்ட புண்ணியவான்களுக்கு...

வன்கண்ணும் கடின இதயமும் கொண்ட மக்கள் செவிசாய்த்தாலும், சாய்க்காவிட்டாலும் (எசே. 2: 4-5) இறைவார்த்தையைத் துணிவுடன் எடுத்துரைத்த இறைவாக்கினர்களுக்கு...

இன்று இறைவனிடம் சிறப்பாக நன்றி சொல்வோம்.

இன்றைய நற்செய்தியின் இறுதிப் பகுதியில் நமக்கு ஓர் எச்சரிக்கையும் தரப்பட்டுள்ளது. அங்கே உடல் நலமற்றோர் சிலர்மேல் கைகளை வைத்துக் குணமாக்கியதைத் தவிர வேறு வல்ல செயல் எதையும் இயேசுவால் செய்ய இயலவில்லை. அவர்களது நம்பிக்கையின்மையைக் கண்டு அவர் வியப்புற்றார். என்று நற்செய்தியில் சொல்லப்பட்டுள்ளது. அற்புதங்களை ஆற்ற வல்ல இறைவனையே கட்டிபோட்டுவிடும் நமது முற்சார்பு எண்ணங்களை அகற்றி, முற்றிலும் மூடிய கல்லறைகளாக மாறியிருக்கும் நமது உள்ளங்களை இறைவன் திறந்து, நமக்கு உயிர் தர வேண்டும் என்று உருக்கமாக மன்றாடுவோம். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.