2015-06-29 15:51:00

பயங்கரவாதத் தாக்குதல்களில் பலியானவர்க்கு அனுதாபம்


ஜூன்,29,2015. கடந்த வெள்ளிக்கிழமையன்று உலகில் இடம்பெற்ற பல்வேறு பயங்கரவாதத் தாக்குதல்களில் பலியானவர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களுடன் செபம் நிறைந்த தனது ஒருமைப்பாட்டுணர்வையும், ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் பெயரில், திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், பிரான்ஸ், குவைத், டுனிசியா ஆகிய நாடுகளுக்கு அனுப்பிய தந்திச் செய்திகளில் திருத்தந்தையின் இந்த ஒருமைப்பாட்டுணர்வு தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெருந்துன்பங்களைக் கொணரும் வன்முறையை மீண்டும் கண்டித்துள்ள திருத்தந்தை, இத்தாக்குதல்களில் பலியானவர்களுக்கு இறைவன் அமைதி எனும் கொடையை வழங்குமாறும், இந்நாடுகளின் மக்களுக்கும், பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கும் இறைவனின் ஆசிரையும் மன்றாடியுள்ளார்.

குவைத் நகர் Shiite பிரிவு முஸ்லிம் மசூதியில் நடந்த குண்டுவைப்பு தாக்குதலில் குறைந்தது 24 பேர் இறந்துள்ளனர் மற்றும் பலர் காயமடைந்துள்ளனர். டுனிசியாவின் Sousseவுக்கு அருகில் சுற்றுலாப் பயணியர் மாளிகை, துப்பாக்கி மனிதர்களால் தாக்கப்பட்டதில் குறைந்தது 37 பேர் இறந்துள்ளனர் மற்றும் பலர் காயமடைந்துள்ளனர்  பிரான்சின் Saint-Quentin-Fallavier வேதியல் தொழிற்சாலையில் நடத்தப்பட்ட வெடிப்பில் குறைந்தது ஒருவர் தலை துண்டிக்கப்பட்டு இறந்துள்ளார் மற்றும் பலர் காயமடைந்துள்ளனர். மேலும், ஐ.நா. பொதுச் செயலரும் தனது கண்டனங்களை வெளியிட்டுள்ளார். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.