2015-06-29 16:06:00

இலங்கையில் நல்ல தலைவர்களுக்கான மார்ச் 12 இயக்கம்


ஜூன்,29,2015. இலங்கையில் நல்ல அரசியல் தலைவர்களை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன், “மார்ச் 12” என்ற பெயரில் புதிய இயக்கம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த இயக்கம் தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்த துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. அதோடு, அதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும் நாடெங்கிலும் பொதுமக்களிடம் கையெழுத்து பெறும் நடவடிக்கையை மார்ச் 12 இயக்கம் தற்போது மேற்கொண்டு வருகின்றது.

கடந்த மாதம் 25ம் தேதி கொழும்பில் ஆரம்பிக்கப்பட்ட இந்நடவடிக்கையின் தொடர்ச்சியாக, இஞ்ஞாயிறன்று யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார் ஆகிய மாவட்டங்களில் பொதுமக்களிடமிருந்து கையெழுத்துக்கள் பெறப்பட்டிருக்கின்றன.

குற்றச்செயலுக்காக தண்டிக்கப்பட்டவர்கள், போதைப்பொருள் பயன்படுத்துபவர்கள், அதனைப் பிறர் பயன்படுத்தத் தூண்டுபவர்கள் போன்றவர்களை வேட்பாளர்களாக நியமிக்கக்கூடாது, பெண்கள், இளையோரின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்கும் வகையில் வேட்பாளர்கள் தெரிவு செய்யப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட எட்டு விடயங்களை மார்ச் 12 இயக்கம் அறிவித்துள்ளது.

PAFFREL என்ற சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் செயல்பாடு என்ற அமைப்பினால் இந்த மார்ச் 12 இயக்கம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : பிபிசி / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.