2015-06-25 16:27:00

பிறரன்பே திருஅவையை நம்பிக்கைக்குரியதாக்கும் - திருத்தந்தை


ஜூன்,25,2015. திருஅவைசார் பாப்பிறை கல்விக் கழகத்தில் பயில்வோரை இவ்வியாழனன்று சந்தித்து உரை வழங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

திருபீடத்தின் வெளியுறவுத் துறை உட்பட பல்வேறு திருஅவைசார் பணிகளில் ஈடுபட பயிற்சிபெறும் அருள் பணியாளர்களுக்கு உரை வழங்கியத் திருத்தந்தை, உரோமைத் தலைமையகத்தின் உண்மை அதிகாரம் என்பது அதன் பிறரன்பே என்று கூறினார்.

இந்தப் பிறரன்பே திருஅவையை மக்களிடையே நம்பிக்கைக்குரியதாக மாற்ற உதவியாய் உள்ளது என்றும் எடுத்துரைத்தத் திருத்தந்தை, எந்த ஒரு பகுதியில் செயலாற்றினாலும், அப்பகுதியின் கலாச்சார அளவுகோல்களையும், சமுதாயத் தேவைகளையும் புரிந்துகொண்டு செயலாற்றவேண்டிய தேவையையும் வலியுறுத்தினார்.

பயிரிடுவதற்குத் தயாராக இருக்கும் ஒரு நிலத்திற்காகக் காத்திராமல், ஒவ்வொரு நிலத்தையும் பயிர் வழங்கும் நிலமாக மாற்ற, நாமே களத்தில் இறங்கி உழைக்க வேண்டியதன் அவசியத்தையும் எடுத்துரைத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

உலகின் எப்பகுதிக்குச் சென்றாலும், அங்குள்ள தேவைகளை உணர்ந்து செயல்படவேண்டும் என்றுரைத்தத் திருத்தந்தை, ஒவ்வொரு கண்டத்தின் இன்றைய அடிப்படை தேவைகள் என்ன என்பதையும் விளக்கிக் கூறினார். 

ஆதாரம் : / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.