2015-06-13 15:14:00

திருத்தந்தை-கத்தோலிக்க இயக்கங்கள் திருஅவைக்கு மூலதனம்


ஜூன்,13,2015. சாரணர் இயக்கம் போன்ற கத்தோலிக்க இயக்கங்கள் திருஅவைக்கு மூலதனம், எல்லாத் துறைகளையும் எல்லாப் பகுதிகளையும் நற்செய்தி அறிவிக்கத்  தூய ஆவியார் தூண்டுகிறார் என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் இச்சனிக்கிழமையன்று தான் சந்தித்த இத்தாலிய கத்தோலிக்க சாரணர் இயக்கத்தின் ஏறக்குறைய ஒரு இலட்சம் உறுப்பினர்களிடம் இவ்வாறு கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவர்கள் இத்தாலியத் திருஅவையில் மதிப்புமிக்க அங்கமாக உள்ளனர் என்று கூறினார்.

பங்குத் தளங்களோடும் மறைமாவட்டங்களோடும் ஒன்றிணைந்து பணியாற்றுமாறும் சாரணர்களைக் கேட்டுக்கொண்ட திருத்தந்தை, இச்சந்திப்புக்கு அதிக அளவில் வந்துள்ள அனைவருக்கும் தனது நன்றியையும் தெரிவித்தார்.

நற்செய்தியைப் புதிய வழியில் அறிவிப்பதற்கும், சமுதாயத்தில் உரையாடலுக்குப் புதிய சக்தியை அளிப்பதற்கும் சாரணர் இயக்கத்தினர் திருஅவைக்கு உதவ முடியும் என்றுரைத்த திருத்தந்தை, பெரிய கிறிஸ்தவ சமூகத்தின் உறுப்பினர்கள் என்பதை சாரணர்கள் எப்போதும் உணர வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

இத்தாலியின் வடக்கிலிருந்து 608, மத்திய பகுதியிலிருந்து 403, தெற்கு மற்றும் தீவுப் பகுதிகளிலிருந்து 550 என சாரணர் குழுக்களின் ஏறக்குறைய ஒரு இலட்சம் உறுப்பினர்கள் இதில் கலந்துகொண்டனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.