ஜூன்,11,2015. ஓர் ஆணும், பெண்ணும் சுதந்திரமான சம்மதத்துடன் இணைந்துவரும் வாழ்வே, திருமண வாழ்வு என்று, 1961ம் ஆண்டு, ஆஸ்திரேலியா வகுத்துக்கொண்ட இலக்கணத்தை, ஆஸ்திரேலிய அரசு பின்பற்றவேண்டும் என்று ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 38 மதத் தலைவர்கள் ஒருங்கிணைந்து கூறியுள்ளனர்.
ஆஸ்திரேலிய பாராளுமன்றம், திருமண உறவைப் பற்றிய மாற்றுக் கருத்துக்களை விவாதித்துவரும் இவ்வேளையில், கத்தோலிக்கர், ஆங்கிலிக்கன், லூத்தரன், ஆர்த்தடாக்ஸ் ஆகிய பல சபையினர் உட்பட, 38 மதத் தலைவர்கள் ஒருங்கிணைந்து அரசிடம் ஒரு விண்ணப்பத்தைச் சமர்பித்துள்ளனர் என்று ZENIT செய்தி நிறுவனம் கூறியுள்ளது.
1961ம் ஆண்டு, காமன்வெல்த் திருமணச் சட்டம், திருமணம் குறித்து வகுத்துள்ள இலக்கணம், நடுநிலையான, உறுதியான இலக்கணம் என்றும், அதை மாற்றவேண்டிய தேவை எதுவும் இல்லையென்றும் மதத் தலைவர்களின் விண்ணப்பம் வலியுறுத்துகிறது.
மனித குலத்தின் ஆரம்பம் முதல், இயற்கையில் உருவான ஆண், பெண் உறவு ஒன்றே, குழந்தைகள் வளர்ப்பிற்கு தகுதியான சூழலாக அமையும் என்றும், மதத் தலைவர்கள் தங்கள் விண்ணப்பத்தில் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மனித இயல்பிற்கு மாறுபட்ட திருமண உறவுகளை சமுதாயத்தின் மீது திணிக்கும்போது, அது மனசாட்சியுடன் தொடர்பான கட்டாயங்களையும் திணிக்கிறது என்று மதத்தலைவர்கள் கவலை வெளியிட்டுள்ளார்.
ஆதாரம் : ZENIT / வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©. |