2015-06-09 15:43:00

விமான நிலைய மறைப்பணியாளர்களுக்கு அனைத்துலக கருத்தரங்கு


ஜூன்,09,2015. விமான நிலையங்களில் ஆன்மீகப் பணியாற்றும் அருள்பணியாளர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கான 16வது அனைத்துலக கருத்தரங்கு உரோம் நகரில் இப்புதனன்று தொடங்குகிறது.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் நற்செய்தியின் மகிழ்வு என்ற திருத்தூது அறிக்கையில் கூறப்பட்டுள்ள, விமான நிலைய மேய்ப்புப்பணிகளை எவ்வாறு செயல்படுத்துவது என்பது குறித்து இக்கருத்தரங்கில் விவாதிக்கப்படும்.

திருப்பீட குடிபெயர்வோர் மற்றும் புலம்பெயர்வோர் அவை நடத்தும் இக்கருத்தரங்கு பற்றிப் பேசியுள்ள, அவ்வவையின் செயலர் ஆயர் ஜோசப் களத்திப்பரம்பில் அவர்கள், விமானப் பயணிகளுக்குப் புதிய வழியில் நற்செய்தி அறிவிப்பது குறித்து ஆராயப்படும் எனத் தெரிவித்தார்.

2013ம் ஆண்டில் ஏறக்குறைய 300 கோடியாக இருந்த விமானப் பயணியர் எண்ணிக்கை கடந்த ஆண்டில் 310 கோடியாக உயர்ந்தது என்றும் தெரிவித்த ஆயர் களத்திப்பரம்பில் அவர்கள், விமான நிலையங்கள் மறைப்பணித்தளங்களாக மாறியுள்ளதை இது காட்டுகின்றது எனவும் கூறினார்.   

இன்று உலகில் ஒவ்வோர் ஆண்டும் ஏறக்குறைய 2 கோடியே 92 இலட்சம் பயணியர் மற்றும் எண்பதாயிரம் வர்த்தக விமானங்கள் இயக்கப்படுகின்றன. 2020ம் ஆண்டில் 20 கோடி வர்த்தக விமானங்கள் இயக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது என்றும் ஆயர் கூறினார்.

இந்த நான்கு நாள் கருத்தரங்கு, ஜூன் 13, வருகிற சனிக்கிழமையன்று நிறைவடையும்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.