2015-06-09 15:49:00

சிரியாவில் உலகின் மனச்சான்றின் மரணத்தைக் காண முடிகின்றது


ஜூன்,09,2015. மத்திய கிழக்குப் பகுதியில் இடம்பெறும் வன்முறைக்கு எதிரான உலகின் நடவடிக்கைகளைப் பார்க்கும்போது, உலகின் மனச்சான்று செத்துவிட்டதாகத் தெரிகிறது என்று, லெபனான் மாரனைட் வழிபாட்டு முறை முதுபெரும் தந்தை கூறினார்.

போர் இடம்பெறும் சிரியாவைப் பார்வையிட்டுள்ள லெபனான் முதுபெரும் தந்தை கர்தினால் Bechara Rai அவர்கள் கடந்த ஞாயிறு மறையுரையில், உலகின் மனச்சான்றுக்கு எதிரான தனது கண்டனத்தைத் தெரிவித்தார்.

சிரியாவில் நான்கு ஆண்டுகளாக இடம்பெற்றுவரும் உள்நாட்டுப் போரில், நாட்டைவிட்டு வெளியேறியுள்ள ஒரு கோடியே 20 இலட்சம் மக்கள் மதிப்புடன் நாடு திரும்பவும், போர் நிறுத்தப்பட்டு அரசியல் தீர்வு காணப்படவும், நாட்டில் அமைதி நிலவவும் அழைப்பு விடுத்தார் கர்தினால் Bechara Rai.

கத்தோலிக்க மற்றும் ஆர்த்தடாக்ஸ் முதுபெரும் தந்தையர் தமாஸ்கு நகரில் இத்திங்களன்று நடத்திய ஆண்டுக் கூட்டத்தில், சிரியா, பாலஸ்தீனம், ஏமன், இன்னும் கிறிஸ்தவர்கள் துன்புறும் பிற நாடுகளில் அமைதிக்காகச் செபித்ததாகவும் கூறினார் கர்தினால் Bechara Rai.

இதற்கிடையே, ஈராக்கின் மொசூல் நகரிலுள்ள பெரிய ஆலயங்களில் ஒன்றான புனித எப்ரேம் சிரியன் வழிபாட்டு முறை ஆர்த்தடாக்ஸ் ஆலயத்தை மசூதியாக மாற்றும் திட்டம் பற்றி ஐஎஸ் தீவிரவாதிகள் அறிவித்துள்ளனர்.     

ஆதாரம் : CNS / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.