2015-06-09 15:31:00

கிறிஸ்தவத் தனித்துவம், இயேசுவுக்குச் சான்று பகர்வதாகும்


ஜூன்,09,2015. கிறிஸ்தவத் தனித்துவத்தின் சுவையை இழக்கச் செய்யாமல், அதன் உண்மைக்குச் சாட்சிகளாக வாழுமாறு, இச்செவ்வாய் காலையில் வத்திக்கான் சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் நிறைவேற்றிய திருப்பலி மறையுரையில் கூறினார்  திருத்தந்தை பிரான்சிஸ்.

நம் கிறிஸ்தவத் தனித்துவம் என்பது என்ன? என்ற கேள்வியுடன் மறையுரையைத் தொடங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நம் அன்றாட வாழ்வில் சான்று பகர்வதற்கென, தெளிவற்ற ஒரு நிலையிலிருந்து ஆழமான விசுவாசத்திற்கு மேற்கொள்ளும் நீண்ட பயணமே கிறிஸ்தவத் தனித்துவம் என்று கூறினார்.

கிறிஸ்தவத் தனித்துவம் என்பது, அறிவுக்கெட்டாத கருத்துக்களால் அல்ல, ஆனால், தெளிவான வாழ்க்கையால் இயேசுவுக்குச் சான்று பகர்வதாகும் என்றும் கூறிய திருத்தந்தை, நாம் பாவிகள் என்பது உண்மையே, நாம் தவறி விழுந்து விடுவோம், ஆயினும், இறைவனின் சக்தியால் நாம் மீண்டும் எழுந்து, நமது பயணத்தைத் தொடர முடியும் என்றும் கூறினார்.

பாவம், நம் தனித்துவத்தின் ஒரு பகுதி, ஆனால், நம் இதயங்களில் தூய ஆவியாரை வழங்கியுள்ள மற்றும் தமது முத்திரையை நம்மீது வைத்துள்ள இயேசு கிறிஸ்துவில் கொண்டிருக்கும் விசுவாசத்தால் நாம் பாவிகள் என்றும் கூறினார் திருத்தந்தை.

ஒரு குறிப்பிட்ட மெய்யியலைப் பின்செல்கின்றவர்கள் அல்ல கிறிஸ்தவர்கள், மாறாக, திருப்பொழிவு பெற்றவர்களாக, தூய ஆவியாரை தங்கள் இதயங்களில் அனுமதித்துள்ளவர்களாக இறைவன் வழங்கியுள்ள தனித்துவத்தோடு விசுவாசத்தில் நிலைத்திருப்பவர்களே கிறிஸ்தவர்கள் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இவ்வுலகப் போக்கினால் இந்தத் தனித்துவத்தைப் பலவீனப்படுத்துகின்றவர்கள் இருக்கின்றனர், இவர்கள் சுவையை இழந்த உப்பு போன்றவர்கள் என்று எச்சரித்த திருத்தந்தை, உண்மைக்குச் சான்று பகரும் அருளை இயேசுவிடம் நாம் கேட்போம் என்று விசுவாசிகளிடம் கூறினார். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.