2015-06-09 14:53:00

கடுகு சிறுத்தாலும்... வாழ்வின் அழகைக் காட்டும் அளவுகோல்


செல்வம் மிகுந்த ஒரு பெண், மனநல மருத்துவரைத் தேடிச் சென்றார். தன் வாழ்வு மகிழ்வற்றதாக மாறிவிட்டதென மருத்துவரிடம் கூறிய அப்பெண், மகிழ்வைக் கண்டடையும் வழிகளை அறிய விரும்பினார். தன் அலுவலகத்தைக் கூட்டி, சுத்தம் செய்துவந்த பெண்ணை, மனநல மருத்துவர் அழைத்தார். அப்பெண் வந்ததும், மருத்துவர், செல்வம் மிகுந்த பெண்ணிடம், "இவர் பெயர் மரியா. இவர் தன் வாழ்வில் மகிழ்வை எவ்விதம் கண்டடைந்தார் என்பதைச் சொல்வார். தயவு செய்து கேளுங்கள்" என்று கூறினார்.

மரியா, அருகிலிருந்த ஒரு நாற்காலியில் அமர்ந்து, பேசத் துவங்கினார்: "என்னுடைய கணவர் மலேரியா நோயினால் இறந்தார். மூன்று மாதங்கள் சென்று, என் ஒரே மகன் ஒரு கார் விபத்தில் இறந்தார். எனக்கென யாருமில்லை, எதுவுமில்லை என்று உணர்ந்தேன். உண்ணவோ, உறங்கவோ முடியவில்லை. தற்கொலை செய்துகொள்ளும் எண்ணம் அவ்வப்போது எழுந்தது. ஒருநாள் நான் வேலை முடிந்து வீட்டுக்குத் திரும்பியபோது, ஒரு குட்டிப்பூனை தெருவில் என்னைப் பின்தொடர்ந்து வந்தது. வெளியே அதிகக் குளிராய் இருந்ததால், அந்தப் பூனையை வீட்டிற்குள் வர அனுமதித்தேன். பாலை ஒரு தட்டில் ஊற்றி, அதற்கு முன் வைத்தேன். அதை முற்றிலும் குடித்து முடித்த பூனைக் குட்டி, என் கால்களில் தன் உடலைத் தேய்த்தது. அதைக் கண்டு, நான் சிரித்தேன். அப்போதுதான் உணர்ந்தேன், நான் சிரித்து பல நாட்கள் ஆகிவிட்டன என்பதை... அவ்வேளையில், எனக்குள் ஓர் எண்ணம் உதித்தது. இந்தக் குட்டிப்பூனைக்கு நான் செய்த உதவி, இதுவரை என்னிடமிருந்து காணாமற் போயிருந்த புன்னகையை மீண்டும் கொணர்ந்ததே, இதேபோல், மற்றவர்களுக்கு உதவிகள் செய்தால், நான் தொலைத்துவிட்ட மகிழ்வை மீண்டும் கண்டடைய முடியுமே என்று சிந்தித்தேன்.

அடுத்தநாள் காலை, கொஞ்சம் பலகாரம் செய்து, என் வீட்டுக்கு அருகில் பல நாட்களாய் படுத்த படுக்கையாய் இருந்த ஒருவருக்கு அதை எடுத்துச் சென்றேன். கண்களில் கண்ணீர் வழிய, அவர் தந்த புன்னகை, என்னை மீண்டும் மகிழ்வில் நிறைத்தது. ஒவ்வொரு நாளும் யாராவது ஒருவருக்கு ஏதாவது ஒரு வகையில் உதவிகள் செய்யத் துவங்கினேன். அவர்களிடம் நான் கண்ட மகிழ்ச்சி, என்னையும் பற்றிக்கொண்டது. இன்று, என்னைவிட, மகிழ்வோடு உறங்கச் செல்லும் ஒருவர் இருப்பாரா என்று எனக்குத் தெரியவில்லை" என்று மரியா பேசி முடித்தார்.

மரியாவின் கதையைக் கேட்ட செல்வம் மிகுந்த பெண், கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்தபடி, மரியாவின் கைகளைப் பற்றி, நன்றி சொன்னார். மருத்துவருக்கும் நன்றி சொல்லிவிட்டு, புன்னகையோடு அவ்விடம் விட்டுச் சென்றார்.

நீ எவ்வளவு மகிழ்வாய் இருக்கிறாய் என்பது வாழ்வின் அழகை நிர்ணயிக்கப் போவதில்லை; உன்னால் மற்றவர்கள் எவ்வளவு மகிழ்வாய் உள்ளனர் என்பதே வாழ்வின் அழகைக் காட்டும் அளவுகோல். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.