2015-06-05 15:51:00

பணம் பயனுள்ளது, ஆனால் மறைப்பணியைப் பாதிப்பதாகவும் மாறலாம்


ஜூன்,05,2015. பாப்பிறை மறைப்பணிகள் அமைப்பின் பொது அவையில் கலந்து கொள்ளும் 170 பிரதிநிதிகளை இவ்வெள்ளியன்று வத்திக்கானின் கிளமெந்தினா அறையில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பணம் உதவி செய்கின்றது, ஆனால் அது மறைப்பணியைப் பாதிக்கும் கருவியாகவும் மாறக்கூடும் என எச்சரித்தார்.

மகிழ்வு, நம்பிக்கை மற்றும் அமைதியின் ஊற்றாகிய நற்செய்தி, மனித சமுதாயத்திற்கு மிக அதிகமாகத் தேவைப்படுகின்றது, திருஅவையின் பெரும் சவால்களில் நற்செய்தி அறிவிப்பு இக்காலத்திலும் இருப்பதால் திருஅவை நற்செய்தி அறிவிப்புக்கு முன்னுரிமை கொடுக்கின்றது என்றும் கூறினார் திருத்தந்தை.

அன்பு, உடன்பிறப்பு உணர்வு மற்றும் நீதியின் நற்செய்தியை அறிவிப்பதற்கு, கிறிஸ்துவின் அன்பும், அவர் மீது நாம் வைத்திருக்கும் விசுவாசமும் நம்மை உந்தித் தள்ளுகின்றது என்றும், அன்பின் நற்செய்தியை பரப்புவது பாப்பிறை மறைப்பணிகள் அமைப்பின் முக்கிய பணியாக உள்ளது என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

நற்செய்தி அறிவிப்புப் பேராயத்தின் கீழ் இயங்கும் பாப்பிறை மறைப்பணிகள் அமைப்பு, மறைப்பணித்தளங்களில் உதவி தேவைப்படும், குறிப்பாக, கடும் ஏழ்மையில் வாடும் மக்களின் நலனில் அக்கறை காட்டிச் செயல்படுகின்றது. இளம் திருஅவைகளின் அருள்பணியாளர்கள் மற்றும் துறவிகளுக்கும் இந்த அமைப்பு உதவி வருகின்றது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.