2015-06-05 16:08:00

கானா பெட்ரோல் விபத்தில் பலியானவர்க்கு திருத்தந்தை செபம்


ஜூன்,05,2015. ஆப்ரிக்க நாடான கானாவில் பெட்ரோல் நிலையம் ஒன்றில் இடம்பெற்ற  தீ விபத்தில் பலியானவர்கள், காயமடைந்தவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருடன் திருத்தந்தையின் ஒருமைப்பாட்டுணர்வையும் செபத்தையும் தெரிவிக்கும் செய்தி ஒன்று அந்நாட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் இச்செய்தியை கானா ஆயர் பேரவைத் தலைவர் ஆயர் Joseph Osi-Bonsu அவர்களுக்கு அனுப்பியுள்ளார்.

கானா நாட்டின் அதிகாரிகளுக்கும், அந்நாட்டினர் அனைவருக்கும் தனது அனுதாபங்களைத் தெரிவித்துள்ளார் திருத்தந்தை.

கானா தலைநகர் அக்ராவில் உள்ள ஒரு பெட்ரோல் நிலையத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக அஞ்சப்படுகிறது. சம்பவம் நடந்தபோது கன மழை மற்றும் வெள்ளப்பெருக்கில் இருந்து தப்பிக்க சாலையில் சென்ற மக்கள் பெட்ரோல் நிலையத்தில் ஒதுங்கினர். பெட்ரோல் நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்ட காஸ் டெர்மினலில் திடீரென ஏற்பட்ட தீ எங்கும் பரவி பயங்கரமாக வெடித்தது.  அருகிலிருந்த கட்டடங்களுக்கும் தீ பரவியது. இதில் இறந்தவர்களின்  எண்ணிக்கை நூறைத் தாண்டும் என்று அஞ்சப்படுகிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி  








All the contents on this site are copyrighted ©.