2015-06-03 17:01:00

ஈக்குவதோர் நாட்டில் திருத்தந்தையின் திருப்பலி இடமாற்றம்


ஜூன்,03,2015 திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஈக்குவதோர் நாட்டில் மேற்கொள்ளும் திருத்தூதுப் பயணத்தின்போது, அவர் திருப்பலி நிறைவேற்றும் இடம், மக்களின் வசதி கருதி, இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

வருகிற ஜூலை மாதம் 6ம் தேதி முதல் 8ம் தேதி வரை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஈக்குவதோர் நாட்டில் மேற்கொள்ளும் பயணத்தின் சிகர நிகழ்வாக, இறை இரக்கத்தின் திருத்தலத்தில் ஆற்றும் திருப்பலி திட்டமிடப்பட்டிருந்தது.

திருத்தந்தையைக் காண, 20 இலட்சத்திற்கும் மேலானோர் திரண்டுவருவர் என்று எதிர்பார்க்கப்படுவதாலும், இறை இரக்கத்தின் திருத்தலத்தில் அத்தனை பக்தர்களும் கூட வசதியில்லை என்பதாலும், அத்திருத்தலத்தில் திருத்தந்தை ஆற்றுவதாக இருந்தத் திருப்பலி, Los Samanes என்ற பூங்காவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று, ஈக்குவதோர் ஆயர் பேரவை அறிவித்துள்ளது.

இந்த இடமாற்றத்தை வத்திக்கான் ஏற்றுக்கொண்டுள்ளது என்று கூறிய ஆயர் பேரவையின் அறிக்கை, ஈக்குவதோர் நாட்டின் Guayaquil என்ற இடத்தில் அமைந்துள்ள இறை இரக்கத்தின் திருத்தலத்திற்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் சென்று செபித்தபின், Los Samanes பூங்காவில் திருப்பலியாற்றுவார் என்று அறிவித்துள்ளது.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஜூலை 5ம் தேதி முதல் 13ம் தேதி முடிய மேற்கொள்ளும் 9வது திருத்தூதுப் பயணத்தில், ஈக்குவதோர், பொலிவியா, மற்றும் பாரகுவே ஆகிய இலத்தீன் அமெரிக்க நாடுகளுக்குச் செல்வார்.

ஆதாரம் : ZENIT / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.