2015-05-29 11:39:00

கடுகு சிறுத்தாலும் : ஏழைக்குச் செய்தது, இறைவனுக்கேச் செய்தது


செல்வந்தர் ஒருவர் இருந்தார். ஒரு நாள் அவர் தன் தோட்டத்தில் விளைந்த வாழைக்குலை ஒன்றை பணியாளிடம் கொடுத்துக் கோவிலில் கொடுக்கச் சொன்னார். ஏழைப் பணியாள் எடுத்துச் செல்லும் வழியில், அவருக்கு அதிகப் பசியெடுக்கவே, அக்குலையிலிருந்து இரண்டு பழங்களை எடுத்துச் சாப்பிட்டுவிட்டார்.  மீதிப் பழங்களைக் கோவிலில் கொடுத்தார்.

அன்றிரவு செல்வந்தர் ஒரு கனவு கண்டார். கனவில் இறைவன் வந்து, ‘நீ எனக்குக் கொடுத்த இரண்டு பழங்களை நான் சாப்பிட்டேன்; ருசியாக இருந்தது’ என்றார்.

செல்வந்தருக்கு மிகக் கோபம் வந்தது. ஒரு குலைப் பழம் கொடுத்திருக்க, இரண்டு மட்டுமே இறைவனுக்குப் போய்ச் சேர்ந்திருக்கிறது. மீதி என்னவாயிற்று எனக் கோபப்பட்டார்.  மறு நாள் காலை, அந்தப் பணியாளைக் கூப்பிட்டு விசாரித்தார். இரண்டு பழங்களைப் பசியினால் தான் சாப்பிட்டதை ஒப்புக்கொண்டு, மீதிக் குலையைக் கோவிலில் கொடுத்து விட்டதைச் சொன்னார் பணியாள்.

செல்வந்தருக்குப் புரிந்தது... அந்த ஏழைப் பணியாள் சாப்பிட்ட பழம் மட்டுமே இறைவனைச் சென்று அடைந்திருக்கிறது என்று!

ஏழை ஒருவருக்குச் செய்ததெல்லாம் இறைவனுக்கேச் செய்ததாகும். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.