2015-05-28 15:34:00

கடுகு சிறுத்தாலும் – இப்படியும் கஞ்சர்கள்!


ஒரு கிராமத்து மனிதரும், அவரின் மனைவியும், ஒரு நாள் விமான நிலையத்தில் விமானம் மேலே கிளம்புவதையும், வானில் வட்டமிடுவதையும், கீழே இறங்குவதையும் ஆர்வத்துடன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். அவர்களின் ஆர்வத்தைப் பார்த்த அங்கிருந்த விமானி ஒருவர், நீங்கள் இருவரும் வாருங்கள். இந்த விமானத்தில் ஏறி, வானத்தில் ஒரு சுற்றுச் சுற்றிவிட்டு வரலாம். ஆளுக்கு நூறு ரூபாய்தான் என்றார். ஆனால் மகா கஞ்சரான கிராமத்து மனிதர், இதற்கு இருநூறு ரூபாயா, இது வீண் செலவு என்று நினைத்து, நாங்கள் வரவில்லை என்றார். எப்படியும் அவர்களிடம் பணம் பெற நினைத்த விமானி, நீங்கள் பணம் தர வேண்டாம். இலவசமாக உங்களை விமானத்தில் ஏற்றிச் செல்கிறேன். ஆனால், விமானம் வானத்தில் பறக்கும்போது, என்ன நடந்தாலும், நீங்கள் சிறு சத்தம்கூடப் போடக் கூடாது. அப்படி சத்தம் போட்டுவிட்டால், கட்டணமாகிய இருநூறு ரூபாயை நீங்கள் கொடுத்துவிட வேண்டும் என்றார். சரி என்று அந்தக் கஞ்சர் தன் மனைவியுடன் விமானத்தில் ஏறி அமர்ந்தார். விமானம் பறக்கத் தொடங்கியது. விமானம் குட்டிக்கரணம் போட்டது. தலை கீழாகப் பறந்தது. சீறிப் பாய்ந்தது. உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு இருந்த கஞ்சர், சிறு சப்தம்கூட எழுப்பவில்லை. வேறு வழியின்றி விமானத்தைத் தரை இறக்கினார் விமானி. பின்னர், கஞ்சரின் கையைக் குலுக்கி, என் பாராட்டுக்கள். எப்படி இது உங்களால் முடிந்தது? என்று கேட்டார் விமானி. அதற்கு கஞ்சர், நான்கூட ஒரே ஒரு சமயம், என்னை அறியாமல் கத்த இருந்தேன். எப்படியோ முயன்று அடக்கிக் கொண்டேன் என்றார். எப்போது? என்று கேட்டார் விமானி. என் மனைவி, விமானத்தில் இருந்து தவறிக் கீழே விழுந்தபோது என்றார் கஞ்சர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.