2015-05-27 14:58:00

கடுகு சிறுத்தாலும்.... : பார்வையின் கறைகள் அகற்றப்படட்டும்


ஒரு புதுமணத் தம்பதியர் புதிய ஒரு நகரத்தில் குடியேறினார்கள். அடுத்த நாள் காலையில் இருவரும் முன்னறையில் அமர்ந்து காபி குடிக்கும்போது, பக்கத்து வீட்டு பெண் துணிகளைத் துவைத்து காயப்போட்டுக்கொண்டிருப்பது ஜன்னல் வழியாகத் தெரிந்தது. அதை பார்த்த மனைவி, கணவரிடம், ‘அங்க பாருங்க, அந்த பொண்ணுக்கு துவைக்கவே தெரியல. துணியெல்லாம் கருப்புப் புள்ளிகளா இருக்கு’ அப்படின்னு சொன்னார். ஜன்னல் வழியே பார்த்த கணவர் ஒன்றுமே சொல்லவில்லை.

பக்கத்து வீட்டுப் பெண் துவைத்து காயப் போடுவதும், அதை ஜன்னல் வழியாகப் பார்க்கும் மனைவி துவைக்க தெரியவில்லை என்று சொல்வதும், கணவர் அதற்கு எதுவுமே சொல்லாமல் இருப்பதும் நிறைய நாட்களாக நடந்தன. திடீரென்று ஒரு நாள் மனைவி ரொம்ப ஆச்சரியமாக, ‘இங்க பாருங்க! கடைசியில நம்ம பக்கத்து வீட்டு பொண்ணு துணி துவைக்கப் படிச்சுட்டா. இன்னைக்கு துணிகளைச் சுத்தமா துவைச்சுருக்கா’ என்று சொன்னார். அதுக்கு அந்தக் கணவர் ‘அது வேற ஒன்னும் இல்ல. இன்னைக்கு காலையில சீக்கிரமா எழுந்து நம்ம வீட்டு ஜன்னல் கண்ணாடிகளை எல்லாம் நான் துடைச்சேன்’ அப்படின்னு சொல்லிட்டு காபி குடிக்க ஆரம்பிச்சார்.

அடுத்தவரோட குறைகளா நாம் நினைப்பது, சில நேரங்களில் நம்முடைய பார்வை பிரச்சினையாகூட இருக்கலாம். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.