2015-05-26 14:23:00

கடுகு சிறுத்தாலும்... விண்ணகம் அடைய நிச்சயமான வழி


தவத்தில் தலைசிறந்து விளங்கிய ஒரு முனிவரைத் தேடி, நால்வர் சென்றனர். "குருவே, விண்ணகம் அடையும் வழியை நீங்கள் நன்கு அறிந்தவர் என்று கேள்விப்பட்டோம். அவ்வழியை எங்களுக்குச் சொல்லித்தாரும்" என்று பணிவுடன் விண்ணப்பித்தனர். குரு அவர்களைப் பார்த்து, "நீங்கள் அடுத்த மாதம் இங்கு வாருங்கள், சொல்லித் தருகிறேன்" என்றார். ஏமாற்றத்துடன் அவர்கள் விடைபெற்ற நேரத்தில், குரு அவர்களிடம், "அடுத்த மாதம் நீங்கள் இங்கு வரும்போது, உங்களில் ஒருவர் உயிரோடு இருக்கமாட்டார்" என்று கூறி, வழியனுப்பினார். இச்செய்தியைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த நால்வரும், வருத்தத்துடன் வீடு திரும்பினர்.

அடுத்த மாதம் வந்தது. நால்வரும் உயிரோடு இருந்தனர். அவர்கள் குருவிடம் சென்று, "எங்களில் ஒருவர் உயிரோடு இருக்கப் போவதில்லை என்று சொன்னீர்கள், ஆனால் நாங்கள் நால்வரும் உயிரோடு இருக்கிறோமே" என்று குருவிடம் சற்று ஏளனமாகக் கூறினர். குரு அவர்களிடம், "சரி... இந்த ஒரு மாதம் நீங்கள் ஒவ்வொருவரும் என்ன செய்தீர்கள்? அதைச் சொல்லுங்கள்" என்று கேட்டார். அவர்கள் அவரிடம், "எங்களில் யார் இறப்போம் என்று தெரியாததாலும், இறந்தபின் விண்ணகத்தை அடையவேண்டும் என்ற ஆவலாலும், நாங்கள் நால்வருமே, இந்த மாதம் முழுவதும் தான தர்மங்கள் அதிகமாகச் செய்தோம்" என்று பதில் அளித்தனர்.

"இறந்துவிடுவோம் என்ற பயத்தில் நீங்கள் ஆற்றிய இந்தப் புண்ணியத்தை, உங்கள் வாழ்நாளெல்லாம் நீங்கள் செய்தால், அதுவே, விண்ணகம் அடைவதற்கு நிச்சயமான வழி" என்று குரு அவர்களிடம் கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.