2015-05-25 16:55:00

கடுகு சிறுத்தாலும் - அறிவாளியிடம் தோற்ற கெட்டிக்காரப் பொய்


ஓர் இதமான காலைப் பொழுதை இரசித்த வண்ணம் சேவல் ஒன்று மரத்தில் அமர்ந்து கூவிக் கொண்டிருந்தது. அந்நேரத்தில் அவ்வழியே பசியுடன் வந்த நரி சேவலைப் பார்த்துவிட்டது. எப்படியாவது அதைக் கீழே இறங்க வைத்து சாப்பிட்டுவிட வேண்டும் என்று எண்ணியது. அதனால் நரி ஒரு தந்திரத்தைக் கையாண்டது. சகோதரரே, பறவைகளுக்கும் விலங்குகளுக்கும் இடையே ஓர் அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இனிமேல் அவைகள் தங்களுக்கு இடையே சண்டை போட்டுக்கொள்ளாமல், உடன்பிறப்பு மனப்பான்மையோடு வாழ வேண்டும் என உறுதி எடுத்துள்ளன, நீ கீழே இறங்கி வா, அது பற்றிப் பேசுவோம் என்றது நரி. சேவல், நரியின் தந்திரத்தைப் புரிந்துகொண்டதால் அதில் அக்கறை காட்டாமல் வேறு பக்கம் தலையைத் திருப்பி எதையோ பார்ப்பது போல் பாவனை செய்தது. உடனே நரி, என்ன சகோதரரே, ஏதோ அக்கறையுடன் எதையோ திரும்பித் திரும்பிப் பார்க்கிறீர் என்று கேட்டது. இல்லை, சில வேட்டை நாய்கள் வருவதுபோல் தெரிகிறது, அவை வேட்டை நாய்கள்தானா என்பதைக் கவனிக்கிறேன் என்றது சேவல். உடனே நரி, சரி சரி, நான் அப்புறம் வந்து பேசுகிறேன் என்று சொல்லிவிட்டுக் கிளம்பியது. அதற்குச் சேவல், என்னருமைச் சகோதரா, நாய்களுக்கு ஏன் பயப்படுகிறீர், இப்பொழுதுதானே அமைதி ஒப்பந்தம் பற்றிச் சொன்னீர், நான் கீழே இறங்கி வருகிறேன், நில்லுங்கள் என்றது. அதற்கு நரி, அந்த ஒப்பந்தம் பற்றிப் பலருக்குத் தெரியும், ஆனால் இந்த நாய்களுக்குத் தெரியாமல் இருந்தால் என் கதி என்ன ஆவது, நான் போகிறேன் என்று சொல்லி வேகமாக ஓடி காட்டுக்குள் சென்று மறைந்தது. கெட்டிக்காரப் பொய்கள் அறிவாளியிடம் எப்படி பலிக்கும்! 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.