2015-05-22 15:37:00

வளர்ந்த நாடுகளில் ஏழை-பணக்காரர் இடைவெளி அதிகரிப்பு


மே,22,2015. பெரும்பாலான வளர்ந்த நாடுகளில் ஏழை மற்றும் செல்வந்தர்களுக்கு இடையேயான இடைவெளி கடந்த முப்பது ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, பெரிய அளவில் அதிகரித்துள்ளது என்று ஓர் ஆய்வறிக்கை கூறுகிறது.

வளர்ந்த நாடுகளின் மக்களில் ஐந்தில் இரண்டு பகுதியினர் கடந்த பத்து ஆண்டுகளில் மிகச் சிறிய அளவே இலாபம் ஈட்டியுள்ளனர் என்றும் தெரியவந்துள்ளது.

பொருளாதார ஒற்றுமை மற்றும் வளர்ச்சிக்கான பன்னாட்டு அமைப்பான OECD வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், அதிகரித்து வரும் இந்த சமத்துவமின்மை பொருளாதார வளர்ச்சியை பாதிக்கிறது என்று கூறியுள்ளது.

அதுமட்டுமன்றி அந்த இடைவெளியானது சமூகச் சூழலுக்கு ஊறு விளைவித்து, நிறுவனங்கள் மீதான நம்பிக்கையை குறைத்து மதிப்பிட வழி வகுத்துவிடும் எனவும் அந்த ஆய்வறிக்கை எச்சரித்துள்ளது.

OECDயில் உறுப்பினர்களாக உள்ள 34 நாடுகளில் இருக்கும் 10 விழுக்காட்டுச் செல்வந்தர்களின் வருமானம், அங்கு ஏழ்மை நிலையில் இருக்கும் 10 விழுக்காட்டு மக்களின் வருமானத்தைவிட பத்து மடங்கு அதிகமாக உள்ளது என்றும் அந்த ஆய்வறிக்கை கண்டறிந்துள்ளது.

தனது உறுப்பு நாடுகளில் கல்வி, பயிற்சி ஆகியவற்றில் அதிக முதலீடுகள் தேவை என்று கோரிக்கை விடுத்துள்ள அந்த அமைப்பு, வேலை வாய்ப்புகளை ஊக்குவிக்கும் வகையில், அதிலும் குறிப்பாக, பெண்களின் வாழ்வாதாரம் மேம்படும் வகையில் கொள்கைகள் வகுக்கப்பட வேண்டும் என OECD வலியுறுத்தியுள்ளது.

ஆதாரம் : பிபிசி / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.