2015-05-22 15:35:00

நேபாளத்தில் திருஅவையின் தொடர் பிறரன்புப் பணிகள்


மே,22,2015. கடும் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள நேபாளத்தில், குறிப்பாக, உள்நாட்டுப் பகுதிகளில் கத்தோலிக்கத் திருஅவையின் பிறரன்புப் பணிகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.

இப்பணிகள் குறித்து பீதெஸ் செய்தி நிறுவனத்திடம் பேசிய நேபாள அப்போஸ்தலிக்க முதன்மை குரு Silas Bogati அவர்கள், இப்பணிகளில் ஈடுபட்டுள்ள திருஅவைப் பணியாளர்கள் அனைவருடன் இணைந்து, அண்மையில் கூட்டம் நடத்தி, இப்பணிகளை மேலும் சிறப்பாக ஒருங்கிணைத்து ஆற்றுவது குறித்து கலந்துரையாடியதாகத் தெரிவித்தார்.

இந்தியாவிலிருந்து பலர் வந்து உதவுகின்றனர் என்றுரைத்த அருள்பணியாளர் Bogati அவர்கள், பன்னாட்டு உதவிகளைக் கொண்டு காரித்தாஸ் நிறுவனம் பல கிராமங்களுக்கு உதவி வருகின்றது என்று தெரிவித்தார்.

கடந்த ஏப்ரல் 25ம் தேதி ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 8,631 பேர் இறந்துள்ளனர் மற்றும் 21,838 பேர் காயமடைந்துள்ளனர். 4,62,646 வீடுகள் சேதமடைந்துள்ளன. 106 வெளிநாட்டவர் உட்பட காணாமல்போயுள்ள 346 பேரைத் தேடும் பணி தொடர்ந்து இடம்பெற்று வருவதாக நேபாள உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது. 

ஆதாரம் : Fides / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.